நெம்மாரா இரட்டை கொலை வழக்கு: அறிக்கை கேட்டு தீர்ப்பு ஒத்திவைப்பு
நெம்மாரா இரட்டை கொலை வழக்கு: அறிக்கை கேட்டு தீர்ப்பு ஒத்திவைப்பு
UPDATED : ஜூலை 15, 2026 07:38 PM
ADDED : ஜூலை 15, 2026 07:31 PM
பாலக்காடு: நெம்மாரா இரட்டை கொலை வழக்கில், குற்றவாளி செந்தாமரைக்கு தண்டனை வழங்குவதற்கு முன், அவரை பற்றிய அறிக்கை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு, தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
பாலக்காடு மாவட்டம், நெம்மாரா போத்துண்டி போயன் நகரை சேர்ந்தவர் செந்தாமரை, 56. இவர், கடந்த, 2025 ஜனவரியில், முன்விரோதம் காரணமாக, அப்பகுதியைச் சேர்ந்த சுதாகரன்,56, அவரது தாய் லட்சுமி, 75, ஆகியோரை கொலை செய்தார்.
செந்தாமரை, ஏற்கனவே சுதாகரனின் மனைவி சஜிதாவை, கடந்த 2019ல் கொலை செய்த வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, இரட்டை ஆயுள் தண்டனை பெற்றவர். அந்த வழக்கில் அவர் மேல்முறையீடு செய்துள்ளார். இதில் ஜாமினில் வெளியே வந்தவர், இரட்டை கொலையை செய்தார்.
பாலக்காடு கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில், கடந்த 13ம் தேதி நீதிபதி கென்னத்து ஜார்ஜ், குற்றம் சாட்டப்பட்ட செந்தாமரை குற்றவாளி என தீர்ப்பளித்தார். தண்டனை விவரங்கள் நேற்று அறிவிக்கப்பட இருந்தது. இந்நிலையில், செந்தாமரை பற்றிய அறிக்கை சமர்ப்பிக்க, குற்றவாளி தரப்புக்கு உத்தரவிட்டு, நீதிபதி தீர்ப்பை ஒத்தி வைத்தார்.
குற்றவாளியை நேரில் ஆஜர்படுத்தத் தேவையில்லை என்றும், காணொலி வாயிலாக ஆஜர்படுத்தினால் போதும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளார்
குற்றவாளியின் பின்னணி, குணம் மற்றும் சமூகச் சூழல் ஆகியவற்றை ஆய்வு செய்து, தண்டனை வழங்க நீதிமன்றம் இந்த அறிக்கையை கோரியுள்ளது.
அரசு வக்கீல் விஜயகுமார் கூறுகையில், ''குற்றவாளி செந்தாமரைக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசு தரப்பு வாதிட்டுள்ளது. தான் செய்த கொடூர கொலைக்கு எவ்வித குற்ற உணர்ச்சியும் இன்றி குற்றவாளி இருக்கிறார். நன்னடத்தை அலுவலரின் அறிக்கையிலும், அவர் மீண்டும் குற்றம் செய்யும் மனநிலையில் இருப்பதாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வழக்கில், நேரடி சாட்சிகள் இல்லாதபோதும், குற்றம் நிரூபிக்கப்பட்ட சூழலில் மரண தண்டனை விதிக்க நீதிமன்றத்திற்கு முழு அதிகாரம் உண்டு,'' என்றார்.
