ADDED : ஆக 11, 2011 04:48 AM
பந்தலூர்:பந்தலூர் அருகே கொளப்பள்ளி - கூடலூர் வழித்தடத்தில் பஸ் இயக்க
வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பந்தலூர் அருகே கொளப்பள்ளியில் இருந்து கூடலூருக்கு தினமும் காலை 8.00
மணிக்கு பஸ் இயக்கப்பட்டு வந்ததால், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் செல்ல
பயனாக இருந்தது. இந்நிலையில், கடந்த 10 நாட்களாக அந்த பஸ் திடீரென
நிறுத்தப்பட்டதால், இலவச பஸ் பாஸ் வைத்துள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள்
செல்ல சிரமம் ஏற்பட்டது. இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்தினரும்,
மாணவர்களும் போக்குவரத்து கிளை நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தும் தீர்வு
காணப்படுவில்லை. இதனால், குறிப்பிட்ட இந்த பஸ்சை இயக்க வலியுறுத்தி நேற்று
காலை 8.00 மணிக்கு கொளப்பள்ளி பஜாரில் மாணவர்கள் திடீர் மறியலில்
ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து அப்பகுதிக்கு வந்த தேவாலா டி.எஸ்.பி., சுரேஷ்குமார்,
இன்ஸ்பெக்டர் தண்டபாணி, தாசில்தார் பாபு, வருவாய் ஆய்வாளர் மோகன், வி.ஏ.ஓ.,
தனராஜ் ஆகியோர், ஊராட்சி மன்ற துணை தலைவர் தங்கவேல் மற்றும் கல்லூரி
மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், ' 12ம் தேதி கூடலூர்
கல்லூரி அலுவலகத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பது,' என
முடிவெடுக்கப்பட்டதால் மறியல் கைவிடப்பட்டது.