/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சர்ச்சைக்குரிய இடத்தில் அறிவிப்பு பலகை
/
சர்ச்சைக்குரிய இடத்தில் அறிவிப்பு பலகை
ADDED : மார் 07, 2026 06:13 AM

பந்தலுார்: நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே, மாநில எல்லையில் தாளூர் சோதனை சாவடி அமைத்துள்ளது. இங்கு பாயும் ஆற்றை மையப்படுத்தி மாநில எல்லை பிரிக்கப்பட்டு, தமிழக எல்லைக்கு உட்பட்ட பகுதியில், வனத்துறை மற்றும் போலீஸ் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டன.
மேலும், இதன் எதிரே உள்ள, 15 சென்ட் நிலத்தில், தாளூர் பகுதியை சேர்ந்த ஸ்கரியா என்பவர் கட்டடம் கட்டி பயன்படுத்தி வந்தார். இந்த கட்டடங்களுக்கு, தமிழகத்தில் இருந்து மின்சாரம் மற்றும் கதவு எண் வழங்கப்பட்டு வரியும் வசூலிக்கப்பட்டு வந்தது.
கேரள அரசு பட்டா மாற்றம் கடந்த, 2011ல், கேரளா மாநிலம் சுல்தான் பத்தேரி தாசில்தார் அலுவலகத்தில் இந்த இடத்தை, ஸ்கரியாவிற்கு, கேரளா மாநில அரசு சார்பில் பட்டா மாற்றம் செய்து வழங்கப்பட்டது. அந்த பகுதியில் புதிய கட்டடம் கட்டப்பட்டு, கேரளா மாநில அரசு வாயிலாக மின் இணைப்பு மற்றும் கதவு எண்கள் வழங்கப்பட்டன. இதனால் சர்ச்சை எழுந்தது.
அதனை தொடர்ந்து, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்திய நிலையில், 2016 பிப்., மாதம், ஊட்டியில் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நடத்தப்பட்ட விசாரணையில், 'சம்பந்தப்பட்ட நிலப்பகுதி, தமிழக அரசு ஆவணங்களில் புறம்போக்கு நிலம்,' என, பதிவு செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது. உடனே தீர்வு காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழக அறிவிப்பு பலகை உடைப்பு அதன்பின், தமிழக அரசு அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை. இதனால், தமிழக அரசு சார்பில் அங்கு வைக்கப்பட்டிருந்த, மாநில எல்லை அறிவிப்பு பலகைகளை, கேரளா மாநில பொதுப்பணித்துறையினர் உடைத்து எறிந்து, கேரளா மாநில அரசு அறிவிப்பு பலகைகளை வைத்தனர்.
இதனை அறிந்து, நேற்று காலை அந்த பகுதியில், நாம் தமிழர் கட்சி நிர்வாகி பொன் மோகன்தாஸ் தலைமையில், 'கேரள அரசு வைத்த அறிவிப்பு பலகைகளை அகற்ற வேண்டும்,' என, வலியுறுத்தி, மக்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.
சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார் துரைசாமி, டி.எஸ்.பி. கல்யாணகுமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி, 'தமிழக -கேரளா உயர் அதிகாரிகள் முன்னிலையில், நில அளவை செய்து தீர்வு காணலாம்,' என, தெரிவித்தனர்.
இந்நிலையில், 'வைக்கப்பட்ட அறிவிப்பு பலகைகளை அகற்றக் கூடாது,' என, கேரளா மாநில பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கேரளா எல்லைக்குள் ஒன்றிணைந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால், பதட்டமான சூழல் ஏற்பட்டு, இரு மாநில எல்லையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இரவு, 7:00 மணி வரை தீர்வு எட்டப்படவில்லை.

