ADDED : அக் 06, 2025 07:28 AM
ஊட்டி: ஊட்டி அருகே நடந்த கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே மஞ்சனக்கொரை பகுதியை சேர்ந்தவர், ஆட்டோ டிரைவர் சிவக்குமார். இவர் தனது வீட்டை வாடகைக்கு விட்டு, ஊட்டியில் குடியிருந்து வருகிறார். இவரது சகோதரர் கிருஷ்ணமூர்த்தி, 55, மஞ்சனக்கொரையில் வசித்து வந்தார். சகோதரர்களுக்கு இடையே முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, 10:30 மணியளவில் மஞ்சனக்கொரையில், கிருஷ்ணமூர்த்தி, சிவக்குமாரின் மகன் அரவிந்த், 32, மற்றும் வீட்டில் குடியிருந்து வரும் வினோத்குமார்,42, ஆகியோர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறில் பலத்த காயமடைந்த கிருஷ்ணமூர்த்தி அப்பகுதி நடைபாதையில் மயங்கி விழுந்தார்.
அப்பகுதியை சேர்ந்தவர்கள் அவரை மீட்டு, 108 ஆம்புலன்சில் ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அதிகாலை, 3:30 மணியளவில் இறந்தார். லவ்டேல் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து, அரவிந்த், வினோத் குமார் ஆகியோரை கைது செய்தனர்.