/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
புளியம்பாறையில் நெற்கதிர் அறுவடை திருவிழா
/
புளியம்பாறையில் நெற்கதிர் அறுவடை திருவிழா
ADDED : நவ 04, 2024 09:46 PM

கூடலுார்; கூடலுார் புளியாம்பாறையில் பாரம்பரியமான பூ புத்தரி அறுவடை திருவிழா சிறப்பாக நடந்தது.
கூடலுாரில் பழங்குடி மக்கள் சார்பில் நெற் பயிர்களுக்கு நன்றி செலுத்தும் வகையிலும், விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் நலமுடன் இருக்கவும், ஆண்டு தோறும் நெல் அறுவடைக்கு முன்பாக பூ புத்தரி எனப்படும் கதிர் அறுவடை திருவிழாவை, ஐப்பசி மாதம், 10ம் நாள் கொண்டாடி வருகின்றனர்.
நடப்பு ஆண்டின் விழா துவக்கமாக நம்பாலக்கோட்டை வேட்டைக்கொருமகன் கோவிலில் கடந்த, 26ம் தேதி இவ்விழா நடந்தது.
தொடர்ந்து பழமையான கோவில்களில் பூ புத்தரி அறுவடை திருவிழா நடைபெற்று வருகிறது.
அதன்படி, புளியாம்பாறை பகவதி மற்றும் ஆயிரம் வில்லி (சிவன்) கோவிலில் இவ்விழா நடந்தது. காலை சிறப்பு பூஜைகளுடன் விழா துவங்கியது. தொடர்ந்து, 11:00 மணிக்கு கதிர் அறுவடை செய்வதற்காக கோவிலில் இருந்து பக்தர்கள், புளியம்வயல் அருகே உள்ள, வயலுக்கு ஊர்வலமாக சென்றனர். அங்கு சிறப்பு பூஜை செய்து, நெற்கதிர்கள் அறுவடை செய்தனர். தொடர்ந்து, செண்டை மேளம் இசையுடன் நெற்கதிர் கட்டை ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தனர்.
கோவில், நெற்கதிருக்கு சிறப்பு பூஜை செய்து, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினர். தொடர்ந்து பக்தர்களுக்கு, அருள் வாக்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
விவசாயிகள் கூறுகையில், 'கோவிலில் பூஜை செய்து, வழங்கப்படும் நெற்கதிர்களை விவசாயிகள் வீட்டில் வைத்து பூஜை செய்வர். தொடர்ந்து, நெல் அறுவடை செய்வதை பாரம்பரியமாக கடைப்பிடித்து வருகின்றனர்,' என்றனர்.