/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஆற்றோரங்களில் ஆழ்துளை கிணறு அதிகரிப்பால் சிக்கல்: ஊட்டி சுற்றுப்புற கிராமங்களில் தலை விரித்தாடும்...குடிநீர் பஞ்சம்!
/
ஆற்றோரங்களில் ஆழ்துளை கிணறு அதிகரிப்பால் சிக்கல்: ஊட்டி சுற்றுப்புற கிராமங்களில் தலை விரித்தாடும்...குடிநீர் பஞ்சம்!
ஆற்றோரங்களில் ஆழ்துளை கிணறு அதிகரிப்பால் சிக்கல்: ஊட்டி சுற்றுப்புற கிராமங்களில் தலை விரித்தாடும்...குடிநீர் பஞ்சம்!
ஆற்றோரங்களில் ஆழ்துளை கிணறு அதிகரிப்பால் சிக்கல்: ஊட்டி சுற்றுப்புற கிராமங்களில் தலை விரித்தாடும்...குடிநீர் பஞ்சம்!
ADDED : மார் 12, 2024 11:30 PM

ஊட்டி:ஊட்டி அருகே, பெம்பட்டி, பேலிதளா உட்பட பல்வேறு கிராமங்களில் நிலவும் கடும் குடிநீர் பஞ்சத்தால், அதிக கட்டணம் கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள நீர்நிலை, சுற்றுச்சூழல், மண் வளத்தை பாதுகாக்கும் நோக்கில் கடந்த, 2018 ம் ஆண்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. மலை பகுதியை இயற்கை விவசாய மாவட்டமாக அறிவிக்கப்பட்டது.
மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுப்படி, அனைத்து துறை ஒருங்கிணைப்புடன் தோட்டக்கலை துறை முன்னிலையில் இதற்கான பணிகள் நடந்து வருகிறது.
தற்போது, 30, சதவீதம் பேர் இயற்கை விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். இதனை அதிகரிக்க தற்போதைய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
மழை குறைவால் மாற்றம்
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக நிலவும் மாறுப்பட்ட காலநிலையால் குறிப்பிட்ட கால கட்டத்தில் பருவமழை பெய்யாமல் காலம் தவறி பெய்து வருகிறது. இதனால், மலை காய்கறி, தேயிலை விவசாயம் பாதிக்கப்பட்டு விவசாயம் நஷ்டமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, பெரும்பாலான பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் குறைந்ததால், விவசாயத்துக்கு போதிய அளவில் தண்ணீர் இல்லை. இதனால், பல்வேறு பகுதிகளிலும், ஐகோர்ட் உத்தரவை மீறி ஆழ்துளை கிணறு போடும் பணிகள் நடந்து வருகிறது.
இதனை தடுக்க வேண்டிய வருவாய் துறை அதிகாரிகள், சனி,ஞாயிறு விடுமுறை நாட்களில் நடக்கும் இப்பணிகளை கண்டும், காணாமல் உள்ளனர். இதனால், நிலத்தடி நீர் வேகமாக உறிஞ்சப்பட்டு, கிராம மக்களுக்கான குடிநீர் தேக்கங்களில் தண்ணீர் இல்லாத சூழல் உருவாகி உள்ளது.
ஆக்கிரமிப்பால் வந்த சோதனை:
மேலும், ஊட்டி அருகே இத்தலார், பெம்பட்டி, பேலிதளா, போர்த்தி, கோத்தக்கண்டி மட்டம், எமரால்டு, முத்தோரை, பாலாடா, நஞ்சநாடு சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவில் மலை காய்கறிகள் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.
இப்பகுதிகளில் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் கேரட் கழுவும் இயந்திரங்களும் நிறுவப்பட்டுள்ளது. இதற்காக தொடர்ச்சியாக, ஆழ்துளை கிணற்றில் இருந்து நிலத்தடி நீரை எடுப்பதால், சுற்றுப்புற கிராமங்களில் குடிநீர் பஞ்சம் அதிகரித்துள்ளது.மக்கள் குடிநீருக்காக ஊற்று நீரை தேடி குடங்களுடன் அலைய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இப்பகுதிகளில் கடந்த இரு நாட்கள் நடந்த மாரியம்மன் திருவிழாவின் போது, குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டதால், உறவினர்களை கூட விழாவுக்கு அழைக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கட்டணம் கொடுத்து குடிநீர் வாங்கி பயன்படுத்த வேண்டிய அவலம் தொடர்கிறது.
கிராம மக்கள் கூறுகையில், 'இதனை தவிர்க்க, கிராமப்புறங்களில் கோர்ட் உத்தரவை மீறி போடப்பட் ஆழ்துளை கிணறுகளை மூடவும்; கேரட் கழுவும் இயந்திர பயன்பாட்டுக்கு குறிப்பிட்ட நேரம் நிர்ணயிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆழ்துளை கிணறு அமைக்க மறைமுக அனுமதி தரும் வருவாய் துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
ஊட்டி ஆர்.டி.ஓ., மகாராஜா கூறுகையில், '' கிராமப்புற பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு அனுமதியின்றி ஆழ்துளை கிணறுகள்; நீரோடை தண்ணீர் மறிக்கப்பட்டு திருடப்படுவது உள்ளிட்ட விதி மீறல் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

