/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ரூ. 10 கோடியில் கோடப்பமந்து கால்வாய் சீரமைப்பு ஊட்டி ஏரியை துார் வாரவும் திட்டம்
/
ரூ. 10 கோடியில் கோடப்பமந்து கால்வாய் சீரமைப்பு ஊட்டி ஏரியை துார் வாரவும் திட்டம்
ரூ. 10 கோடியில் கோடப்பமந்து கால்வாய் சீரமைப்பு ஊட்டி ஏரியை துார் வாரவும் திட்டம்
ரூ. 10 கோடியில் கோடப்பமந்து கால்வாய் சீரமைப்பு ஊட்டி ஏரியை துார் வாரவும் திட்டம்
ADDED : பிப் 22, 2024 06:21 AM

ஊட்டி: ஊட்டி கோடப்பமந்து கால்வாய் சீரமைப்பு பணி மற்றும் ஊட்டி ஏரியை துார்வாரும் பணிகளுக்கு, சிறப்பு மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட நிதி, 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.
ஊட்டி நகராட்சியில், 36 வார்டுகள் உள்ளன. அதில், 30 வார்டுகளின் கழிவுநீர் பாதாள சாக்கடையில் இணைக்கப்பட்டு, கோடப்பமந்து கால்வாய் வழியாக வெளியேறுகிறது. 3 கி.மீ., துாரம் உள்ள கோடப்பமந்து கால்வாய் வழியாக வெளியேறும் கழிவுநீர் படகு இல்ல ஏரியில் அமைக்கப்பட்ட சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு ஏரியில் கலக்கிறது.
குப்பையால் பாதிப்பு
நகரில் உள்ள பல குடியிருப்புகளின் குப்பை, கழிவுகளை கால்வாயில் கொட்டப்படுவதால் கழிவுநீர் செல்ல போதிய வழி இல்லாமல் ஆங்காங்கே அடைப்பு ஏற்படுகிறது. மழை சமயத்தில் ஏற்படும் வெள்ளத்தால் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்து பாதிப்பு ஏற்படுத்துகிறது.
கடந்த, 2018ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியின் போது, கால்வாயை முழுமையாக சீரமைக்க நகராட்சி சார்பில், 5.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்தது. பெயரளவுக்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்டது.
இப்பணிக்காக கொண்டுவரப்பட்ட ராட்சத குழாய்கள், கட்டுமான பொருட்கள் களவாடப்பட்டது. 'சம்மந்தப்பட்ட அதிகாரிகள், கான்ராக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, பொதுமக்கள் சார்பில் மாவட்ட கலெக்டரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ரூ.10 கோடி ஒதுக்கீடு
தற்போதைய தி.மு.க., ஆட்சியில், கோடப்பமந்து கால்வாய் மற்றும் படகு இல்ல ஏரியை துார்வாரும் திட்டமாக கொண்டு வந்து, சிறப்பு மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட நிதியாக, 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
முதற்கட்டமாக, கோத்தகிரி சாலையிலிருந்து தென்றல் பாலம், மத்திய பஸ் ஸ்டாண்ட் பாலம், படகு இல்ல சுத்திகரிப்பு நிலையம் வரை துார்வாரப்பட்டு, ஆங்காங்கே தடுப்பு சுவர் அமைத்து, கழிவுநீர் தொட்டி அமைக்கப்பட உள்ளது. 'ஊட்டி நகரில் கடந்த பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத பிரச்னையாக உள்ள கோடப்பமந்து கால்வாய் பணியை தரமான முறையில் மேற்கொள்ள வேண்டும்,' என, உள்ளூர் மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ஏரியை துார் வார திட்டம்
ஊட்டி கமிஷனர் ஏகராஜ் கூறுகையில், ''கோடப்பமந்து கால்வாய் மற்றும் ஊட்டி ஏரி முழுமையாக துார்வார, 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு தற்போது பணிகள் நடந்து வருகிறது. பணிகள் விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இப்பணியை தொடர்ந்து, ஊட்டி ஏரியை முழுமையாக துார்வார நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இப்பணிக்கு உள்ளூர் மக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும். குப்பை கழிவுகளை கால்வாயில் வீச கூடாது. இதனால், மழை காலத்தில் வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்து விடும் ஆபத்து உள்ளது, '' என்றார்.