மனம் விட்டு பேசுங்கள்; பிரச்னைகள் தீரும் --குடும்ப சங்கமம் நிகழ்ச்சியில் அறிவுரை
மனம் விட்டு பேசுங்கள்; பிரச்னைகள் தீரும் --குடும்ப சங்கமம் நிகழ்ச்சியில் அறிவுரை
ADDED : ஜன 16, 2025 04:30 AM

பந்தலுார் : பந்தலுார் அருகே எருமாடு தனியார் மண்டபத்தில், 'வயநாடன் செட்டி சர்வீஸ் சொசைட்டி' மற்றும் மகளிர் அணி இணைந்து குடும்ப சங்கமம் நிகழ்ச்சியை நடத்தின.
மாநில செயலாளர் சண்முகம் வரவேற்றார். குத்து விளக்கு ஏற்றுதல்; கடவுள் வாழ்த்துடன் விழா துவங்கியது.
தலைவர் வேணுகோபால் தலைமை வகித்து பேசுகையில், ''தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்கள், செட்டி சமுதாய மக்கள். இவர்கள் தற்போது நீலகிரி மாவட்டம் மற்றும் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர்.
விவசாயத்தை தொழிலாக கொண்டிருக்கும் நிலையில், தற்போது அனைத்து துறைகளிலும் முத்திரை பதிப்பது வருகின்றனர்,'' என்றார்.
நிர்வாகி சதீஷ் கோவிந்தன் பேசுகையில், ''மனிதன் நல்ல வார்த்தைகளால் பேச வேண்டும். இதனால், குடும்பத்தில் மட்டுமல்லாமல், வெளியிடங்களிலும் நன்மை ஏற்படும். நாம் உலகத்தை பற்றி சிந்திப்பவர்களாகவும், வேதங்களை படிப்பவர்களாகவும் மாறினால் மனம் சுத்தமாக இருக்கும். குடும்பத்தில் தவறுகளை மட்டும் சுட்டி காட்டாமல், இதயத்தை திறந்து, நல்ல விஷயங்களை பேசி அரவணைத்து செல்ல வேண்டும். எந்த பிரச்னைக்கு மனம் விட்டு பேசினால் தீர்வு ஏற்படும்,''என்றார்.
மாநில மகளிர் அணி தலைவி யசோதா, கேரளா மகளிர் அணி தலைவி சுசீலா, முன்னாள் நிர்வாகிகள் பத்மநாபன், வாசு, ஜெயச்சந்திரன், சந்திரதாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இணை செயலாளர் பிரபாகரன் நன்றி கூறினார்.
