ADDED : மார் 05, 2026 05:16 AM
கூடலுார்: கூடலுாரை சேர்ந்த அரசு பள்ளி மாணவர், 80 வினாடிகளில் 100 ஆங்கில வார்த்தைகளை, தமிழில் மொழி பெயர்த்து கூறி, சர்வதேச சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார்.
கூடலுார் புளியாம்பாறை பகுதியை சேர்ந்த சவுந்தராஜன் சைலஜா ஆகியோர் மகன் ஹிமனீஸ். இவர் புளியாம்பாறை அரசு உயர்நிலை பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், ஆங்கில வார்த்தைகளை விரைவாக, தமிழில் மொழி பெயர்த்து கூறும் திறமை படைத்தவர்.
இதனை அறிந்த, கூடலுாரை சேர்ந்த கிருஷ்ணகுமார், மாணவருக்கு பயிற்சி அளித்தார். தொடர்ந்து, 80 வினாடிகளில் 100 ஆங்கில வார்த்தைகளை விரைவாக தமிழில் மொழி பெயர்த்து கூறினார். இது சர்வதேச சாதனை புத்தகத்தில் இடம் பெற்றதுடன், அதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. மாணவரின் சாதனையை, பள்ளி தலைமை ஆசிரியர் சங்கர், ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர். பயிற்சியாளர் கிருஷ்ணகுமாருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

