ஊட்டி ஏரியில் படர்ந்துள்ள ஆகாய தாமரையால் அவல நிலை!:பல ஆண்டுகள் பல கோடி ரூபாய் செலவழித்தும் வீண்
ஊட்டி ஏரியில் படர்ந்துள்ள ஆகாய தாமரையால் அவல நிலை!:பல ஆண்டுகள் பல கோடி ரூபாய் செலவழித்தும் வீண்
UPDATED : ஆக 25, 2026 05:23 PM
ADDED : ஆக 25, 2026 05:01 PM

ஊட்டி: ஊட்டி படகு இல்ல ஏரியில் அதிகரித்து வரும் ஆகாய தாமரையால், ஏரியின் அழகு பாதிக்கப்பட்டு வருவதுடன், சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்வதில் சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது.
ஊட்டி படகு இல்லம், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கட்டுப்பாட்டில் இங்கு வருகிறது. இங்குள்ள ஏரியில் சுற்றுலா பயணிகளுக்கான படகு சவாரி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆண்டுக்கு சராசரியாக, 16 லட்சம் சுற்றுலா பயணியர் இங்கு படகு சவாரி செய்கின்றனர். இங்குள்ள ஏரியில், கடந்த, 40 ஆண்டு காலமாக ஆகாய தாமரை அவ்வப்போது வளர்ந்து வருகிறது. இதனை அகற்றும் பணிகளும் நடந்து வருகிறது. எனினும், ஏரியில் கலக்கும் கழிவு நீரால், இதன் வளர்ச்சியை கட்டுப்படுத்த முடிவதல்லை.
அடர்த்தியாக படரும் இந்த செடிகளால் மிதி படகுகள் , துடுப்பு படகுகள் ஆங்காங்கே சிக்கி கொள்ளும் நிலை ஏற்படுகிறது. ஏரியின் பரப்பை இவை மூடுவதால், நீர்வாழ் உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன.
குறிப்பாக, இங்கு அதிகளவில் காணப்பட்ட, கண்ணாடி கெண்டை மீன்கள் அழிந்து வருகிறது. மேலும், தேங்கி நிற்கும் இந்த செடிகளுக்கு இடையே கொசுக்கள் மற்றும் பூச்சிகள் அதிகமாக உற்பத்தியாவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆட்சியின் போது, இங்கு காணப்பட்ட ஆகாயதாமரை அகற்றப்பட்டு, ஏரியும் துார் வரப்பட்டது. மேலும், கோடப்பமந்து கால்வாயில் அடித்து வரும் பிளாஸ்டிக் கழிவுகள்; குப்பை ஆகியவற்றை ஏரியின் கரையில் அகற்றி, தண்ணீரை மட்டும் விடும் பணிகள் நடந்தது. இதன் பராமரிப்பில் தொய்வு ஏற்பட்டதால், தற்போது ஏரியை ஆகாயதாமரை ஆக்கிமிக்கப்பட்டுள்ளது. இதனை அகற்றும் நடவடிக்கை இல்லாததால், இதன் வளர்ச்சி வேகமாக அதிகரித்து வருகிறது.
இதனால், சுற்றுலா பயணிகள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் படகு சவாரி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால், பலரும் படகு சவாரி செய்வதை தவிர்த்து செல்லும் சூழ்நிலை உருவாகி வருகிறது. விரைவில், இரண்டாம் சீசன் துவங்க உள்ள நிலையில், இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, இங்குள்ள ஆதாய தாமரையை அகற்றி, ஏரியை துாய்மை படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநில நீர்வளத்துறை அதிகாரி அருண் கூறுகையில்,''ஏரியில் படர்ந்துள்ள ஆகாயதாமரை அகற்றும் பணியில் தொடர்ந்து நடந்து வருகிறது. தற்போது ஏரியில் படர்ந்துள்ள ஆகாய தாமரை அகற்றும் பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
