ADDED : ஏப் 14, 2026 05:50 PM

பாலக்காடு: பாலக்காடு மாவட்டத்தில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள 'ஸ்ட்ராங் ரூம்'களுக்கு உச்சகட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
கேரள மாநில சட்டசபை தேர்தல் கடந்த 9ம் தேதி நடந்தது. வரும் மே 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. இந்நிலையில், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் தலா ஒன்று என மொத்தம் 12 'ஸ்ட்ராங் ரூம்'கள் தயார் செய்யப்பட்டு, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
மத்திய பாதுகாப்பு படையினர், 24 மணி நேரமும் துப்பாக்கி உடன் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் மாநில போலீசாரும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, ஓட்டு எண்ணும் மையங்களுக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து 'ஸ்ட்ராங் ரூம்'களிலும் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டு, மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகளால் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. பாதுகாப்பு அறைகளுக்குள் நுழையும் அதிகாரிகளின் விவரங்களை பதிவு செய்ய, தொகுதி வாரியாக பிரத்யேக 'லாக் புக்' பராமரிக்கப்படுகிறது.
பாலக்காடு மாவட்டத்தில் மொத்தம் மூன்று மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. பத்திரிப்பாலா மவுண்ட் சீனா பப்ளிக் பள்ளியில், திருத்தாலா, பட்டாம்பி, சொரனூர் மற்றும் ஒற்றப்பாலம் ஆகிய நான்கு தொகுதிகளின் ஓட்டுகள் எண்ணப்படுகிறது.
அகத்தேத்தறை என்.எஸ்.எஸ் பொறியியல் கல்லூரியில், கொங்கோடு, மண்ணார்க்காடு, மலம்புழா மற்றும் பாலக்காடு ஆகிய நான்கு தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. பாலக்காடு அரசு விக்டோரியா கல்லூரியில், தரூர், சித்தூர், நெம்மாறா மற்றும் ஆலத்தூர் ஆகிய நான்கு தொகுதிகளின் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.
