/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
புலிகள் கணக்கெடுப்பு: களத்தில் 282 வன ஊழியர்கள்
/
புலிகள் கணக்கெடுப்பு: களத்தில் 282 வன ஊழியர்கள்
ADDED : ஜன 08, 2026 05:28 AM

கூடலுார்: முதுமலை, மசினகுடியில் துவங்கிய புலிகள் மற்றும் வனவிலங்கு கணக்கெடுப்பு பணியில்,284 வன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு யானைகள் முகாமில், தேசிய புலிகள் ஆணையத்தின் சார்பில், அகில இந்திய புலிகள் மதிப்பீடு-2026 திட்டம் குறித்து, தென் மண்டல அளவிலான, புலிகள் கணக்கெடுப்பு திட்ட பயிற்சி முகாம் கடந்த, செப்., 24ல் துவங்கி, 26 தேதி வரை நடந்தது.
முகாமில், இந்திய புலிகள் மதிப்பீடு, கணக்கெடுப்பு அவசியம், புலிகள் கணக்கெடுப்பு முறைகள் தேசிய புலிகள் காப்பக ஆணைய அதிகாரிகள் பயிற்சி அளித்தனர். பயிற்சி முகாமில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரபிரதேச புலிகள் காப்பக வன அதிகாரிகள், வனவிலங்கு நிறுவனத்தின் நிபுணர்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து, முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி வனக்கோட்டத்தில் அகில இந்திய புலிகள் கணக்கெடுப்பு -2026, பாகம்-3ன் படி, டிச., மாதம், 251 இடங்களில், தலா இரண்டு கேமராக்கள் வீதம், 782 தானியங்கி கேமராக்கள் பொருத்தி புலிகள் கணக்கெடுப்பு பணி,30 நாட்கள் நடந்தது.
தொடர்ந்து, முதுமலை மசினகுடி பகுதியில் பாகம்-1ன் படி, 5 நாட்கள் நேரடி புலிகள் மற்றும் வனவிலங்குகள் கண்காணிப்பு பணிகள் நேற்று துவங்கியது. இதற்காக, வனப்பகுதிகள், 71 நேர்கோடு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, பிரிவுக்கு தலா-4 வன ஊழியர்கள் வீதம், 284 வன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பணியின் போது புலி மற்றும் வனவிலங்குகளை நேரடியாக பார்ப்பது, எச்சம், கால் தடம் மூலம் கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகள், 11ம் தேதி வரை நடக்கிறது.
வனத்துறையினர் கூறுகையில், 'முதுமலை, மசினகுடியில், 5 நாட்கள் நடைபெறும், புலிகள் மற்றும் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணியில் வன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக அவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. சுற்றுலா பணிகள் தடையின்றி வழக்கம் போல நடக்கும்,' என்றனர்.

