/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சுற்றுலா பயணிகளுக்கு 'தண்ணி' காட்டுறாங்க! காட்சிப்பொருளான தானியங்கி இயந்திரங்கள்
/
சுற்றுலா பயணிகளுக்கு 'தண்ணி' காட்டுறாங்க! காட்சிப்பொருளான தானியங்கி இயந்திரங்கள்
சுற்றுலா பயணிகளுக்கு 'தண்ணி' காட்டுறாங்க! காட்சிப்பொருளான தானியங்கி இயந்திரங்கள்
சுற்றுலா பயணிகளுக்கு 'தண்ணி' காட்டுறாங்க! காட்சிப்பொருளான தானியங்கி இயந்திரங்கள்
ADDED : ஏப் 09, 2025 10:06 PM

நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்க, 24 ஆண்டுகளுக்கு முன்பு,'கேரிபேக்' உட்பட, 17 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.
கடந்த, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, ஐகோர்ட் உத்தரவின் படி, ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில்கள்; குளிர்பான பாட்டில்கள் கடைகளில் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டு அமலில் உள்ளது.
தொடர்ந்து, 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் கேன்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. இதன் காரணமாக, ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள்; உள்ளூர் மக்கள் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் கிடைக்காமல் அவதிப்பட்டனர்.
'வாட்டர் ஏ.டி.எம்.,'திட்டம்
இந்நிலையில், சுற்றுலா பயணிகளின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, மார்க்கெட், கலெக்டர் அலுவலகம், பிங்கர்போஸ்ட் உட்பட குன்னுார், கோத்தகிரி, கூடலுார், பந்தலுார், மஞ்சூர் என மாவட்ட முழுவதும், 70 இடங்களில், 'வாட்டர் ஏ.டி.எம்.,'கள் வைக்கப்பட்டன.
அதில், ஒரு ரூபாய் நாணயம் செலுத்தினால், 200 மி.லி; 2 ரூபாய் போட்டால், 400 மி.லி.,; 5 ரூபாய் செலுத்தினால், 1 லிட்டர் குடிநீர் பிடித்து கொள்ளலாம். அங்கேயே தண்ணீர் குடிக்க டிம்ளர் பொருத்தப்பட்டது.
இந்த திட்டம் துவங்கிய போது சிறப்பாக செயல்பட்ட 'வாட்டர் ஏ.டி.எம்.,' இயந்திரங்கள், அதன்பின் ஏற்பட்ட பராமரிப்பு தொய்வால், மெல்ல, மெல்ல செயல் இழந்தன.
சில இயந்திரங்களில் வரும் குடிநீர் மிகவும் மாசு கலந்ததாக இருந்தது. நாணயம் செலுத்தும்பகுதி இயங்காமல் போனது.
பழுது நீக்க கோர்ட் உத்தரவு
இந்த தகவலின் பேரில், ஐகோர்ட் அமைத்த குழுவினர் ஆய்வு செய்து, சுற்றுலா பயணிகள் பயன் பெறும் வகையில், வாட்டர் ஏ.டி.எம்.,களை பழுது நீக்க, மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டனர். தொடர்ந்து, மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் உள்ள, 20 வாட்டர் ஏ.டி.எம்.,கள் சில மாதங்களுக்கு முன்பு சீரமைக்கப்பட்டன.
எனினும், மீண்டும் பராமரிப்பில்லாத காரணத்தால், வாட்டர் ஏ.டி.எம்.,தொட்டிகளில் ஊற்றப்படும் குடிநீர் மாசு கலந்து வந்தது.
மேலும், ஊட்டியில் காலை நேரங்களில் தண்ணீர் மிகவும் குளிர்ச்சியாக வருவதால், அந்த தண்ணீரை பயன்படுத்த முடியாமல், சுற்றுலா பயணிகளும், உள்ளூம் மக்களும் அவதிப்பட்டனர்.
அதில் பயன்படுத்தப்படும் தண்ணீரின் சுகாதாரம் குறித்த வெளிப்படையாக அறிய முடியாத நிலையும் தொடர்கிறது.
கோடை சீசனில்திண்டாட்டம்
தற்போது, ஊட்டி கோடை சீசன் துவங்கி உள்ள நிலையில், மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான வாட்டர் ஏ.டி.எம்., இயந்திரங்கள் செயல்படாமல் காணப்படுகின்றன.
ஒரு சில இயந்திரங்கள் செயல்பட்டும் யாரும் குடிநீர் பிடிக்க செல்வதில்லை. இதனால், வாட்டர் ஏ.டி.எம்., பகுதியை சுற்றி வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. சிலர் அதன் முன்பு கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
இதனால், வெளி மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வருகை தரும், சுற்றுலா பயணிகள், சுகாதாரமான குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். 5 லிட்டர் குடிநீர் கேன் வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
சுற்றுலா பயணி ரவி கூறுகையில், ''நீலகிரியில் உள்ள கடைகளில் ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில்கள் விற்பனை இல்லை. வாட்டர் ஏ.டி.எம்., இயந்திரங்கள் பராமரிப்பு இல்லாமல் உள்ளதால், பெரும்பாலானவற்றில் குடிநீர் வருவது இல்லை. இதனால், குடிநீருக்காக அலைந்து திரியும் நிலை உள்ளது.
பல இடங்களில் மிகவும் மோசமான நிலையில் உள்ள வாட்டர் ஏ.டி.எம்.,களில் தண்ணீர் பிடித்து குடிக்க அச்சமாக உள்ளது.
எனவே, குடிநீர் இயந்திரங்களை பராமரித்து துாய்மையான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சுற்றுலா பயணிகள் மத்தியில் இதற்கான நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்,'' என்றார்.
-நிருபர் குழு-

