தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ சுற்றுலா பயணிகளுக்கு 'தண்ணி' காட்டுறாங்க! காட்சிப்பொருளான தானியங்கி இயந்திரங்கள்

சுற்றுலா பயணிகளுக்கு 'தண்ணி' காட்டுறாங்க! காட்சிப்பொருளான தானியங்கி இயந்திரங்கள்

சுற்றுலா பயணிகளுக்கு 'தண்ணி' காட்டுறாங்க! காட்சிப்பொருளான தானியங்கி இயந்திரங்கள்


ADDED : ஏப் 09, 2025 10:06 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2025 10:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்க, 24 ஆண்டுகளுக்கு முன்பு,'கேரிபேக்' உட்பட, 17 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.

கடந்த, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, ஐகோர்ட் உத்தரவின் படி, ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில்கள்; குளிர்பான பாட்டில்கள் கடைகளில் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டு அமலில் உள்ளது.

தொடர்ந்து, 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் கேன்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. இதன் காரணமாக, ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள்; உள்ளூர் மக்கள் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் கிடைக்காமல் அவதிப்பட்டனர்.

'வாட்டர் ஏ.டி.எம்.,'திட்டம்


இந்நிலையில், சுற்றுலா பயணிகளின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, மார்க்கெட், கலெக்டர் அலுவலகம், பிங்கர்போஸ்ட் உட்பட குன்னுார், கோத்தகிரி, கூடலுார், பந்தலுார், மஞ்சூர் என மாவட்ட முழுவதும், 70 இடங்களில், 'வாட்டர் ஏ.டி.எம்.,'கள் வைக்கப்பட்டன.

அதில், ஒரு ரூபாய் நாணயம் செலுத்தினால், 200 மி.லி; 2 ரூபாய் போட்டால், 400 மி.லி.,; 5 ரூபாய் செலுத்தினால், 1 லிட்டர் குடிநீர் பிடித்து கொள்ளலாம். அங்கேயே தண்ணீர் குடிக்க டிம்ளர் பொருத்தப்பட்டது.

இந்த திட்டம் துவங்கிய போது சிறப்பாக செயல்பட்ட 'வாட்டர் ஏ.டி.எம்.,' இயந்திரங்கள், அதன்பின் ஏற்பட்ட பராமரிப்பு தொய்வால், மெல்ல, மெல்ல செயல் இழந்தன.

சில இயந்திரங்களில் வரும் குடிநீர் மிகவும் மாசு கலந்ததாக இருந்தது. நாணயம் செலுத்தும்பகுதி இயங்காமல் போனது.

பழுது நீக்க கோர்ட் உத்தரவு


இந்த தகவலின் பேரில், ஐகோர்ட் அமைத்த குழுவினர் ஆய்வு செய்து, சுற்றுலா பயணிகள் பயன் பெறும் வகையில், வாட்டர் ஏ.டி.எம்.,களை பழுது நீக்க, மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டனர். தொடர்ந்து, மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் உள்ள, 20 வாட்டர் ஏ.டி.எம்.,கள் சில மாதங்களுக்கு முன்பு சீரமைக்கப்பட்டன.

எனினும், மீண்டும் பராமரிப்பில்லாத காரணத்தால், வாட்டர் ஏ.டி.எம்.,தொட்டிகளில் ஊற்றப்படும் குடிநீர் மாசு கலந்து வந்தது.

மேலும், ஊட்டியில் காலை நேரங்களில் தண்ணீர் மிகவும் குளிர்ச்சியாக வருவதால், அந்த தண்ணீரை பயன்படுத்த முடியாமல், சுற்றுலா பயணிகளும், உள்ளூம் மக்களும் அவதிப்பட்டனர்.

அதில் பயன்படுத்தப்படும் தண்ணீரின் சுகாதாரம் குறித்த வெளிப்படையாக அறிய முடியாத நிலையும் தொடர்கிறது.

கோடை சீசனில்திண்டாட்டம்


தற்போது, ஊட்டி கோடை சீசன் துவங்கி உள்ள நிலையில், மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான வாட்டர் ஏ.டி.எம்., இயந்திரங்கள் செயல்படாமல் காணப்படுகின்றன.

ஒரு சில இயந்திரங்கள் செயல்பட்டும் யாரும் குடிநீர் பிடிக்க செல்வதில்லை. இதனால், வாட்டர் ஏ.டி.எம்., பகுதியை சுற்றி வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. சிலர் அதன் முன்பு கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

இதனால், வெளி மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வருகை தரும், சுற்றுலா பயணிகள், சுகாதாரமான குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். 5 லிட்டர் குடிநீர் கேன் வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சுற்றுலா பயணி ரவி கூறுகையில், ''நீலகிரியில் உள்ள கடைகளில் ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில்கள் விற்பனை இல்லை. வாட்டர் ஏ.டி.எம்., இயந்திரங்கள் பராமரிப்பு இல்லாமல் உள்ளதால், பெரும்பாலானவற்றில் குடிநீர் வருவது இல்லை. இதனால், குடிநீருக்காக அலைந்து திரியும் நிலை உள்ளது.

பல இடங்களில் மிகவும் மோசமான நிலையில் உள்ள வாட்டர் ஏ.டி.எம்.,களில் தண்ணீர் பிடித்து குடிக்க அச்சமாக உள்ளது.

எனவே, குடிநீர் இயந்திரங்களை பராமரித்து துாய்மையான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சுற்றுலா பயணிகள் மத்தியில் இதற்கான நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்,'' என்றார்.

பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்...

மாவட்ட திட்ட அலுவலர் (வளர்ச்சி பிரிவு)வாணி கூறுகையில், ''ஊட்டி காலநிலைக்கு ஏற்ப குடிநீர் ஏ.டி.எம்., இயந்திரங்களில் சூடானதண்ணீர் வினியோகிப்பது; தடிமனான ஒரு லிட்டர் பாட்டிலில் குடிநீர் வழங்குவது போன்ற மாற்றங்கள் செய்ய உள்ளோம். விரைவில் பராமரிப்பு பணியில் கவனம் செலுத்தி, அனைத்து ஏ.டி.எம்.,களிலும் சுத்தமான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து வாட்டர் ஏ.டி.எம்., களை சிறப்பாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.



நீலகிரியில் 'பிளாஸ்டிக்' ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், சுற்றுலா வரும் பயணிகள் பயன்படுத்த ஏதுவாக அமைக்கப்பட்ட வாட்டர் ஏ.டி.எம்.கள் பழுதடைந்து, தண்ணீர் இல்லாமல் காட்சி தருகிறது. இதனால், சுற்றுலா பயணிகள், நீலகிரிக்குள் நுழைந்தால் குடிநீர் இல்லாமல் சிரமப்படுகின்றனர். எனவே, இதன் பராமரிப்பை சிறப்பாக செயல்படுத்த தனியார் ஊழியர்களை நியமிக்க வேண்டும்.


சிவதாஸ், தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்: மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வாட்டர் ஏ.டி.எம்., களால் தற்போது சுற்றுலா பயணியருக்கு எந்த பலனும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பல லட்சம் ரூபாய் வீணாகியுள்ளது. சர்வதேச சுற்றுலா பயணியரின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டு வாட்டர் ஏ.டி.எம்.களை புதுப்பித்து, கோடை சீசனில் குடிநீர் பிரச்னை இல்லாமல் பார்தது கொள்ள வேண்டும்.
கிருஷ்ணன், வியாபாரி, கோத்தகிரி: மாவட்டத்தின் எல்லையானகோத்தகிரி வழியாகவே பயணிகள் வந்து செல்கின்றனர். பயணிகளுக்காக, வாட்டர் ஏ.டி.எம்.,கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டும் வீணாக காணப்படுகின்றன. இதனால் சுற்றுலா பயணிகள் தண்ணீருக்காக அலையும் நிலை உள்ளது. கோடை சீசன் காலங்களில், சுற்றுலா பயணிகளுக்கு தடையில்லாமல் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பழனிவேல், வியாபாரி, பந்தலுார்: தமிழக - கேரள எல்லையில் பந்தலுார் பகுதிகளில் உள்ள வாட்டர்ஏ.டி.எம்., இயந்திரங்களால் எந்த பயனும் இல்லை. இயந்திரம் அருகிலேயே இதற்கான கிணறு அமைக்கப்பட்டு, எந்த சுத்திகரிப்பும் செய்யாமல் நேரடியாக தண்ணீர் சில மாதங்கள் மட்டும் வினியோகிக்கப்பட்டு வந்தது. இந்த பகுதிக்கு வரும் வெளி மாநில சுற்றுலா பயணிகள் ஹோட்டல் மற்றும் டீ கடைகளுக்கு வந்து குடிதண்ணீர் வாங்கி செல்கின்றனர்.
முபாரக், தன்னார்வலர், குன்னுார்: குன்னுார் பஸ் ஸ்டாண்ட் பணிகள் நடந்து வரும் நிலையில் இங்கு தற்போது வாட்டர் ஏ.டி.எம். இல்லாததால், தன்னார்வலர்கள் சார்பில் தினமும் குடிநீர் தொட்டி வைத்து மக்களுக்கு இலவசமாக குடிநீர் வழங்கப்படுகிறது. இங்குள்ள சில ஏ.டி.எம்., களில் எந்த காயின் இட்டால், எத்தனை லிட்டர் குடிநீர் கிடைக்கும் என்ற விபரங்கள் இல்லை. சில ஏ.டி.எம்., களில் குடிநீர் வந்தால் அதன் சுகாதாரம் குறித்த நம்பகத்தன்மை இல்லை. பராமரிக்கப்படுவதில்லை.



-நிருபர் குழு-

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us