UPDATED : ஜூலை 05, 2026 06:38 PM
ADDED : ஜூலை 05, 2026 06:21 PM

பாலக்காடு: தொடர் கனமழையால், நெல்லியாம்பதி சுற்றுவட்டாரப் பகுதிகளில், ஆங்காங்கே மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதித்தது.
ஜூலை 4 அதிகாலை, நெம்மாரா --- நெல்லியாம்பதி சாலையில் மரப்பாலம் அருகே, ராட்சத மரம் சாலையின் குறுக்கே விழுந்தது.
நெம்மாராவிலிருந்து காரப்பாறை நோக்கி பயணித்த, கேரளம் அரசு பஸ் உட்பட ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டன. நெம்மாரா வனத்துறை சோதனைச் சாவடி அதிகாரிகள், மரத்தை வெட்டி அகற்றிய பின், போக்குவரத்து சீரானது.
ஜூலை 4 காலை, மீரா பிளோரா எஸ்டேட் சாலையிலும் பெரிய மரம் விழுந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து தடைபட்டது. எஸ்டேட் தொழிலாளர்கள் மரத்தை அகற்றி, போக்குவரத்தை சீர்படுத்தினர். நெல்லியம்பதி மலைப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், இப்பகுதியில் கவனமாக செல்ல வேண்டும் என வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
