/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
யானை தாக்கி இருவர் பலி மக்கள் மறியல் போராட்டம்
/
யானை தாக்கி இருவர் பலி மக்கள் மறியல் போராட்டம்
ADDED : மார் 10, 2026 02:47 AM

கூடலுார்: நீலகிரி மாவட்டம், கூடலுார் தேவர்சோலை மாணிக்கலாடியைச் சேர்ந்தவர், ரவி, 60; காரக்குன்னுவைச் சேர்ந்தவர் நிங்கராஜ், 66. நண்பர்களான இருவரும், நேற்று முன்தினம் இரவு, தனியார் தேயிலை தோட்டப்பகுதியில், காட்டு யானை தாக்கியதில் இறந்து கிடந்தனர்.
தேவர்சோலை போலீசார், வனத்துறையினர், இருவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக எடுத்து செல்ல முயன்றனர். அங்கு வந்த மக்கள், 'உயர் அதிகாரிகள், இப்பகுதிக்கு வந்து, தங்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வரை, உடல்களை எடுக்க விடமாட்டோம்' என போராட்டத்தில் ஈடுபட்டனர். கூடலுார் எம்.எல்.ஏ., பொன் ஜெயசீலன், மக்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டார்.
வன அலுவலர் தேவராஜ், ஆர்.டி.ஓ., குணசேகரன், டி.எஸ்.பி., வசந்தகுமார், தாசில்தார் சங்கர் கணேஷ், இன்ஸ்பெக்டர் ரவிவர்மா ஆகியோர் மக்களிடம் பேச்சு நடத்தினர். அதில், 'இருவரையும் தாக்கி கொன்ற யானையை, கும்கி யானைகள் உதவியுடன், முதுமலை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்தவர் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். உரிய நிவாரணம் வழங்க வேண்டும்' என, மக்கள் வலியுறுத்தினர்.
உரிய நடவடிக்கை எடுப்பதாக, வன அலுவலர் தேவராஜ் உறுதி அளித்தார். அதன் பின், போராட்டத்தை மக்கள் கைவிட்டனர்.

