டீசல் இல்லாமல் நின்ற இன்ஜின் இரு ரயில்கள் தாமதம்
டீசல் இல்லாமல் நின்ற இன்ஜின் இரு ரயில்கள் தாமதம்
ADDED : ஜூன் 14, 2026 09:19 AM
குன்னுார்: நீலகிரி மாவட்டம், குன்னுார் - மேட்டுப்பாளையம் இடையே 'எக்ஸ் கிளாஸ்' ரயில் இன்ஜின்கள் மலைப்பகுதியில் இயக்கப்பட்டு வருகின்றன.
இன்று (14ம் தேதி) ரயில்வே பொது மேலாளர், குன்னுாரில் இருந்து மேட்டுப்பாளையம் ரயில் பாதையில் சிறப்பு தனி ரயிலில் ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டப்பட்டுள்ளது. இதற்காக, நேற்று மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னுாருக்கு வந்து கொண்டிருந்த இன்ஜின், கல்லாறு பகுதியில் திடீரென டீசல் இல்லாமல் நின்றது.
இதனால், மதியம், 1:30 மணிக்கு குன்னுாரில் இருந்து மேட்டுப்பாளையம் புறப்பட்ட சிறப்பு மலை ரயில் ஹில்குரோவ் பகுதியில், ஒரு மணி நேரத்திற்கு மேல் நிறுத்தப்பட்டதால் சுற்றுலா பயணியர் அதிருப்தி அடைந்தனர். அதே போல, மாலை, 3:20 மணிக்கு குன்னுாரில் இருந்து புறப்பட்ட ரெகுலர் மலை ரயிலும் ஹில் குரோவில் நிறுத்தப்பட்டது.
கல்லாறு ஸ்டேஷனுக்கு டீசல் கொண்டு வந்து ஊற்றிய பின், காலி ரயில் இன்ஜின் இயக்கப்பட்டது. அதன் பின், இரு ரயில்களும் மேட்டுப்பாளையம் சென்றன.
