ஊட்டியில் பால் விற்பனை இயந்திரம் அமைக்கும் பணி தீவிரம்! பிளாஸ்டிக் கவர் பயன்பாட்டுக்கு விரைவில் தடை
ஊட்டியில் பால் விற்பனை இயந்திரம் அமைக்கும் பணி தீவிரம்! பிளாஸ்டிக் கவர் பயன்பாட்டுக்கு விரைவில் தடை
UPDATED : ஜூலை 16, 2026 05:58 PM
ADDED : ஜூலை 16, 2026 05:51 PM

ஊட்டி: பால் மற்றும் பால் உப பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கவர்களை தவிர்ப்பதற்கான மாற்று வழிகளை கண்டறிய, ஊட்டியில் ஆவின் நிறுவனம் சார்பில் தானியங்கி பால் விற்பனை இயந்திரம் நிறுவப்படும் பணி நடந்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில், 21 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,'மலைப்பகுதியான ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளில் அனைத்து வகையான பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு முழுமையான தடை விதிக்க வேண்டும்,' என, சென்னை ஐகோர்டில் வழக்கு தொடரப்பட்டது.
ஊட்டியில் பணி துவக்கம் இதை தொடர்ந்து, 'பால் மற்றும் பால் உப பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கவர்களை தவிர்ப்பதற்கான மாற்று வழிகளை கண்டறிய வேண்டும்,' என, அரசுக்கும், ஆவின் நிறுவனத்திற்கும் கோர்ட் உத்தரவிட்டது. அதன்பின், பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்) சார்பில், கோர்டில் மனு தாக்கல் செய்யப்பட்டதில், 'நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் முக்கிய பகுதிகளில் தானியங்கி பால் விற்பனை இயந்திரம் நிறுவப்படும். முதற்கட்டமான சோதனை அடிப்படையில் ஊட்டி மற்றும் கொடைக்கானலில் தானியங்கி பால் விற்பனை இயந்திரம் நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது,' என, தெரிவிக்கப்பட்டது. அதில், ஊட்டியில் சேரிங்கிராஸ் உழவர் சந்தை பகுதியில் ஆவின் நிறுவனம் சார்பில் தானியங்கி பால் விற்பனை இயந்திரம் அமைக்கும் பணி துவக்கப்பட்டு, நடந்து வருகிறது.
ரூ. 7 லட்சத்தில் இயந்திரம் ஆவின் அதிகாரிகள் கூறுகையில்,'பால், பால் உப பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கவர்களை தவிர்க்கும் நோக்கில் கோர்ட் உத்தரவுப்படி, ஊட்டியில் தானியங்கி பால் விற்பனை இயந்திரம் அமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.
இதற்காக தனியார் நிறுவனத்திடம், 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு இயந்திரங்கள் வாங்க உள்ளோம். தானியங்கி விற்பனை இயந்திரங்களின் செயல்பாடு, மக்களின் வரவேற்பு உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்ட பின், விரைவில் இந்த இயந்திரம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் பட்சத்தில் மாவட்டத்தின் பிற பகுதிகளில் படிப்படியாக செயல்படுத்தப்படும்,' என்றனர்.
