ADDED : அக் 21, 2025 07:58 PM
பந்தலூர்:பந்தலூர் அருகே மேங்கோரேஞ்ச் பகுதியில், பழுதடைந்த சாலையை இளைஞர்கள் சீரமைத்தனர்.
பந்தலூர் அருகே மேங்கோரேஞ்ச் தேரை தொழிற்சாலை அருகில் இருந்து, ஏலமன்னா, கொளப்பள்ளி, அய்யன்கொல்லி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலை அமைந்துள்ளது.
இந்த சாலையில் தினசரி டிப்பர் லாரிகள் சென்று வருவதால், சாலை முழுமையாக சேதம் அடைந்து குழிகளாக மாறியது.
இதனால் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார் உள்ளிட்ட சிறிய வாகனங்கள், சாலையில் செல்லும்போது அடிக்கடி பழுதடைந்து நின்று விடுகிறது.
இதனை சீரமைக்க நெல்லியாலம் நகராட்சி நிர்வாகத்திடம், வாகன ஓட்டுநர்கள் மற்றும் இப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில் தீபாவளி பண்டிகை விடுமுறை நாளான நேற்று, இந்தப் பகுதி இளைஞர்கள் ஒன்றிணைந்து சாலை வரை மண் மற்றும் கற்களை எடுத்து, சாலையில் உள்ள குழிகளில் போட்டு சமன்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
விடுமுறை நாளில் சாலை சீரமைப்பில் ஈடுபட்ட இளைஞர்களை அந்த வழியாக வந்து சென்ற, வாகன ஓட்டுனர்கள் பாராட்டினார்கள்.