/
உள்ளூர் செய்திகள்
/
பெரம்பலூர்
/
லஞ்ச வழக்கில் சிக்கிய வி.ஏ.ஓ., சஸ்பெண்ட்
/
லஞ்ச வழக்கில் சிக்கிய வி.ஏ.ஓ., சஸ்பெண்ட்
ADDED : ஜூலை 05, 2024 02:28 AM

பெரம்பலுார்:பெரம்பலுாரில், லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள வி.ஏ.ஓ., சஸ்பெண்ட் செய்து சப்-கலெக்டர் கோகுல் உத்தரவிட்டார்.
பெரம்பலுார் புது பஸ் ஸ்டாண்ட் பின்புறம் உள்ள வெங்கடாஜலபதி நகரில் அகிலா திருமண மண்டபம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதற்கு தடையின்மை சான்று பெற திருமண மண்டபத்தின் மேலாளர் துரைராஜ்,55, பெரம்பலுார் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
விண்ணப்பத்தை பரிசீலித்த துணை வட்டாட்சியர் பழனியப்பன் தனக்கு 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால் தடையின்மை சான்று வழங்குவதாக துரைராஜிடம் தெரிவித்தார். லஞ்சம் தர விருப்பமில்லாத துரைராஜ், பெரம்பலுார் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார்.
ஜூலை 2ம் தேதி துரைராஜ் துணை வட்டாட்சியர் பழனியப்பனிடம் 20 ஆயிரம் ரூபாயை கொடுத்தார். அப்போது, அங்கிருந்த கீழக்கரை வி.ஏ.ஓ., நல்லுசாமியை அந்த பணத்தை வாங்கி வைக்குமாறு பழனியப்பன் கூறியதையடுத்து, நல்லுசாமி கையில் பணத்தை வாங்கினார். அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர்.
இதைத்தொடர்ந்து, இருவரிடமும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தாலுகா அலுவலகத்தில் வைத்து விசாரித்தபோது, துணை வட்டாட்சியர் பழனியப்பன் நெஞ்சு வலிப்பதாக கூறி மருத்துவமனையில் சேர்க்குமாறு கேட்டுக் கொண்டதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் அனுமதியுடன், தாசில்தார் சரவணன், பெரம்பலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக பழனியப்பனை சேர்த்தார்.
வி.ஏ.ஓ., நல்லுசாமியை மட்டும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதைத்தொடர்ந்து, வி.ஏ.ஓ., நல்லுசாமியை சஸ்பெண்ட் செய்து சப்-கலெக்டர் கோகுல் நேற்று உத்தரவிட்டார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வட்டாட்சியர் பழனியப்பன்ஜூலை 3 அதிகாலை 3 மணியளவில் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். இத்தகவலறிந்த, பெரம்பலுார் லஞ்ச ஒழிப்பு போலீசார் பழனியப்பனை தேடி வருகின்றனர். லஞ்ச ஒழிப்பு போலீசார் தாசில்தார் சரவணனிடம் பழனிப்பன் தப்பியோடியது குறித்து அறிக்கை கேட்டுள்ளனர்.