/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
அலட்சிய வங்கிக்கு ரூ.10 லட்சம் தண்டம்
/
அலட்சிய வங்கிக்கு ரூ.10 லட்சம் தண்டம்
ADDED : ஆக 18, 2024 02:13 AM
புதுக்கோட்டை:புதுக்கோட்டையை சேர்ந்த முத்தழகு மனைவி எலிசா, 45. இவர், தனியார் வங்கி கட்டுப்பாட்டில் இருந்த நத்தம்பண்ணை அபிராமி நகரிலுள்ள, 2,408 சதுரடி நிலத்தை ஏலம் எடுத்துள்ளார்.
ஏல விதிமுறைகளின்படி, 1.73 லட்சம் ரூபாய் முன் பணமாகவும், பின்னர், பல தவணைகளில், 17.38 லட்சம் ரூபாயை வங்கியில் செலுத்தியுள்ளார்.
மூன்று ஆண்டுகளுக்கு பின், அந்த இடத்தை முறைப்படி அளந்து கொடுக்காமல், வங்கி அதிகாரிகள் எலிசா பெயரில் பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளனர்.
வருவாய்த் துறையில் பட்டா கோரி விண்ணப்பித்தபோது, அந்த இடம், 1,615 சதுரடி மட்டுமே இருந்துள்ளது. பத்திரப்படி, 793 சதுர அடி குறைவாக இருந்தது. வங்கியில் கேட்டபோது, முறையான பதில் இல்லை.
புதுக்கோட்டை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் எலிசா வழக்கு தொடர்ந்தார்.
விசாரணை முடிவில், 793 சதுரடிக்கு இழப்பீடாக வங்கி நிர்வாகம், 10 லட்சம் ரூபாயை, ஆண்டுக்கு, 9 சதவீதம் வட்டியுடன், 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும்.
அவ்வாறு வழங்காவிட்டால், குறிப்பிட்ட தொகையுடன் ஆண்டுக்கு, 12 சதவீதம் வட்டியும் வழங்க வேண்டும் என, குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

