/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் மறியல்
/
குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் மறியல்
ADDED : ஏப் 20, 2024 10:44 PM
புதுக்கோட்டை,:புதுக்கோட்டையில் நகராட்சிக்கு உட்பட்ட சில பகுதிகளில் குடிநீர் வந்து ஒரு மாதம் கடந்த நிலையில் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 42 வார்டுகளிலும் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை நகராட்சியை 11 ஊராட்சிகளோடு இணைத்து புதுக்கோட்டையை மாநகராட்சியாக, தமிழக அரசு தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது.
காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதால், புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் 15 தினங்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதுவும் ஒரு சில பகுதிகளில் ஒரு மாதத்திற்கு ஒருமுறை தான் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை 6வது வார்டு பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக குடிநீர் வராததால் பொதுமக்கள் ஒரு குடம் 10 ரூபாய் கொடுத்து குடிநீர் வாங்கி வருகின்றனர். மேலும், பொதுமக்கள் அதற்கும் திண்டாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.
ஒரு மாத காலமாக குடிநீர் வராததை கண்டித்து, நேற்று புதுக்கோட்டை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், திருக்கோகர்ணம் பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓட்டு கேட்பதற்கு மட்டும் அரசியல் கட்சியினர் வீடு வீடாக வருகின்றனர். கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருகிறோம் என்று கூறி ஓட்டுகளை பெற்றனர்.
ஆனால், எங்களுக்கு குடிநீர் பிரச்சினை தீர்ப்பதற்கு எந்த ஒரு அரசியல் கட்சியும் களத்தில் இறங்கி வரவில்லை என்று பொதுமக்கள் ஆக்ரோஷமாக கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓட்டுப்பதிவு முடிந்து மறுநாளில் அரசியல் கட்சிகள் மீது பொதுமக்கள் கோபம் கொண்டு களத்தில் இறங்கி போராடியது குறிப்பிடத்தக்கது.

