ADDED : ஆக 17, 2011 01:30 AM
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் மரணமடைந்த மதுரை கலெக்டரின் தாயார் உடலுக்கு புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி, எஸ்.பி., முத்துசாமி உட்பட அரசுத்துறை அதிகாரிகள் பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம் அடுத்த பெருஞ்சுனை கிராமத்தைச் சேர்ந்தவர் சகாயம். இவர் மதுரை மாவட்ட கலெக்டராக உள்ளார். இவரது தந்தை உகாரபிள்ளை ஏற்கனவே இறந்துவிட்டார். தாயார் சவரியம்மாள்(90), தன் இரண்டாவது மகன் உபகார சாமியுடன் புதுக்கோட்டையில் வசித்துவந்தார். முதுமை காரணமாக உடல்நலம் குன்றிய நிலையில் சவரியம்மாள் நேற்றுமுன்தினம் நள்ளிரவு மரணமடைந்தார். தாயார் மரணமடைந்த தகவலறிந்ததும் நேற்று அதிகாலை புதுக்கோட்டை வந்த இளைய மகன் கலெக்டர் சகாயம், அவரது உடலை பார்த்து கண்ணீர் சிந்தினார். அவருக்கு சகோதரர்கள் தனசாமி, உபகாரசாமி, சேவியர், இருதயராஜ் ஆகியோர் ஆறுதல் கூறினர். சவரியம்மாள் உடலுக்கு புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி, எஸ்.பி., முத்துசாமி, டி.ஆர்.ஓ., சாம்பசிவம், ஆர்.டி.ஓ., முத்துமாரி, டி.எஸ்.பி., கீதா உட்பட புதுக்கோட்டை மற்றும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அரசுத்துறை அதிகாரிகள் பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். சவரியம்மாள் உடல் நல்லடக்கம் செய்வதற்காக புதுக்கோட்டையிலிருந்து நேற்று மாலை 3 மணிக்கு அவரது சொந்த ஊரான பெருஞ்சுனை கிராமத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.