பாதி வழியில் பழுதாகி நின்ற அமைச்சரின் காரால் பரபரப்பு
பாதி வழியில் பழுதாகி நின்ற அமைச்சரின் காரால் பரபரப்பு
ADDED : ஜூலை 26, 2026 10:12 PM
புதுக்கோட்டை : புதுக்கோட்டையில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சென்ற அரசு கார், பாதி வழியில் பழுதாகி, சாலையின் நடுவே நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்ட மைய நுாலகத்தில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். இங்கு டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2, குரூப் 2ஏ மற்றும் குரூப் 4 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளும், மாதிரி தேர்வுகளும் நடைபெற்று வருகின்றன.
மேலும் இங்கு இரவு, 8 மணி வரை தான் தாங்கள் பயிற்சி பெற முடிவதாகவும், அதன்பின் நுாலகத்தை பூட்டி விடுவதாகவும், 10 மணி வரை தங்களுக்கு நேரம் ஒதுக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை வைத்தனர்.ஆனால், எட்டு மணிக்கு நுாலகத்தை பூட்டி விட வேண்டும் என்று விதி இருப்பதால், அரசிடம் எடுத்துக்கூறி இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்தார்.
அதன்பின், திருமயத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க அமைச்சர், அரசு காரில் சென்ற போது, திருமயம் அருகே, பைபாஸ் சாலையில் அமைச்சரின் கார் திடீரென்று பழுதாகி, சாலையின் நடுவிலேயே நின்றது. அப்போது, அந்த காரை சாலை ஓரத்தில் தள்ளி சென்று நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து, அவரது காருக்கும் பின்னால், கட்சி நிர்வாகிகள் வந்த காரில் அமைச்சர் ஏறி, திருமயத்திற்கு சென்று நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். சிறிது நேரத்தில் மற்றொரு அரசு கார், உடனடியாக வரவழைக்கப்பட்டு நேற்று நடக்கவிருந்த நிகழ்வுகளில் பங்கேற்க அமைச்சர் சென்றார். அமைச்சர் சென்ற அரசு கார், பாதி வழியிலேயே சாலையில் பழுதாகி நின்றதால், பரபரப்பு ஏற்பட்டது.
