/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பங்குனி விழாவில் ஓட்டு சேகரித்த வேட்பாளர்கள்
/
பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பங்குனி விழாவில் ஓட்டு சேகரித்த வேட்பாளர்கள்
பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பங்குனி விழாவில் ஓட்டு சேகரித்த வேட்பாளர்கள்
பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பங்குனி விழாவில் ஓட்டு சேகரித்த வேட்பாளர்கள்
ADDED : மார் 28, 2024 06:14 AM
பரமக்குடி: பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பங்குனி விழாவில் ராமநாதபுரம் லோக்சபா வேட்பாளர்கள் அனைவரும் ஓட்டு சேகரித்தனர்.
பரமக்குடியில் நேற்று காலை 4:00 மணி முதல் முத்தாலம்மன் கோயில் பால்குட விழாவையொட்டி வைகை ஆற்றுப்பகுதியில் பால் குடங்களை கட்டத் துவங்கினர். அங்கு ராமநாதபுரம் லோக்சபா தி.மு.க., கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனி வைகை ஆற்றில் பக்தர்களிடம் ஓட்டு சேகரித்தார்.
பஜார் பகுதியில் காலை 6:30 மணிக்கு சிறிது நேரம் பக்தர்களை கும்பிட்டபடி இருந்தார். பரமக்குடி எம்.எல்.ஏ., முருகேசன் உடன் இருந்தார்.
*அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயபெருமாள் வைகை ஆற்றில் பக்தர்களிடம் ஓட்டு சேகரித்த நிலையில் முத்தாலம்மன் கோயில் முன்பு இருந்த மேடையில் ஏறி பக்தர்களிடம் ஓட்டு சேகரித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., சதன் பிரபாகரன், மாவட்ட செயலாளர் முனியசாமி, மகளிர் அணி இணை ஒருங்கிணைப்பாளர் கீர்த்திகா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
*தொடர்ந்து சுயேச்சை வேட்பாளர் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் வைகை ஆற்றுப்பகுதிக்கு வந்திருந்தார். அவர் பக்தர்களை கும்பிட்டபடி நாளை எனக்கு சின்னம் ஒதுக்கப்படும். மீண்டும் உங்களை சந்திக்க வருவேன் என்றார்.
மேலும் வேல் குத்தி வந்த பக்தர்களின் காலைத் தொட்டு வணங்கியும், நீண்ட நேரம் ஒவ்வொரு இடமாக நின்று பக்தர்களை கும்பிட்டபடி வாக்குகளை சேகரித்தார். பின்னர் கோயிலில் அம்மன் சன்னதிக்கு அழைத்துச் சென்ற நிர்வாகிகள் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
காலை 7:30 முதல் 9:30 மணி வரை அப்பகுதியில் இருந்த பன்னீர்செல்வம் அருகில் இருந்த டீக்கடையில் பணியாரம் சாப்பிட்டபடி வாக்கு சேகரித்தார். மேலும் கைக்குழந்தையை கொஞ்சிய பன்னீர்செல்வம் குழந்தைக்கு பணத்தை வழங்கி சென்றார்.
முன்னதாக பா.ஜ., வினர் வந்த நிலையில் இளைஞர் அணி பா.ஜ., நிர்வாகி ஹரி மாலை அணிவித்து வேல் வழங்கினார்.
முத்தாலம்மன் கோயில் பகுதியில் பன்னீர்செல்வம் வந்த போது அருகில் இருந்த மேடையில் அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயபெருமாள் மற்றும் நிர்வாகிகள் இருந்ததால் தொண்டர்கள் கோஷங்களை எழுப்பினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.