/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
எட்டு ஆண்டுகளில் 41 ஆயிரம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு இணைப்பு வழங்க முடிவு
/
எட்டு ஆண்டுகளில் 41 ஆயிரம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு இணைப்பு வழங்க முடிவு
எட்டு ஆண்டுகளில் 41 ஆயிரம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு இணைப்பு வழங்க முடிவு
எட்டு ஆண்டுகளில் 41 ஆயிரம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு இணைப்பு வழங்க முடிவு
ADDED : ஏப் 25, 2024 05:54 AM

ராமநாதபுரம், : ராமநாதபுரம் மாவட்டத்தில் அடுத்த எட்டு ஆண்டுகளில் 41 ஆயிரம் வீடுகளுக்கு குழாய் வழியாக இயற்கை எரிவாயு இணைப்பு வழங்கப்படவுள்ளதாக 'ஏஜி அண்ட் பி பிரதம்' நிறுவனத்தின் மண்டலத்தலைவர் எசக்கிமுத்து பூமாரி தெரிவித்தார்.ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் காஞ்சிபுரம், ராமநாதபுரம் மாவட்டத்தில் வீடுகளுக்கு குழாய் வழியாக இயற்கை எரிவாயு வழங்கும் பணி நடக்கிறது. ராமநாதபுரத்தில் 11 கி.மீ.,க்கு ஸ்டீல் பைப்லைனும், 140 கி.மீ., மீடியம் டென்சிட்டி பாலி எதிலீன் பைப்லைன் அமைக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக சக்கரக்கோட்டை, பட்டணம்காத்தான் ஊராட்சிகளில் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது 1500 இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ராமநாதபுரம் நகராட்சிக்கும் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. 8 ஆண்டுகளில் மாவட்டம் முழுவதும் 41 ஆயிரம் இணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
பெட்ரோலிம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம் தேசிய உள்நாட்டு குழாய் வழி இயற்கை எரிவாயு இயக்கத்தை மே 31 வரை நீட்டித்துள்ளது.இதையடுத்து மே 31 வரை எரிவாயு குழாய் இணைப்பு கேட்டு பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்குரூ.6000 டிபாசிட் கட்ட வேண்டியதில்லை. இலவசமாக இணைப்பு வழங்கப்படும்.
மேலும் ஒரு மாதம் ரூ.600 மதிப்புள்ள எரிவாயு இலவசமாக வழங்கப்படும். சதாரணமாக வீடுகளில் பயன்படுத்தப்படும் எல்.பி.ஜி., சிலிண்டர்களை விட 30 சதவீதம் விலை குறைவு. இயற்கை எரிவாயு காற்றை விட லேசாக இருப்பதால் பாதுகாப்பானது. விபத்தின்றி பயன்படுத்தலாம்.
இயற்கை எரிவாயு இணைப்புகளை அதிகரிப்பதோடு வாகனங்களுக்கு மாற்று எரிபொருளாக இயற்கை எரிவாயுவை பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகிறது. வாகனங்களில் பயன்படுத்தும் போது 45 சதவீதம் வரை எரிபொருள் செலவு குறைகிறது.
எல்.பி.ஜி., இணைப்பு முற்றிலும் உங்களிடமே இருக்கும். இயற்கை எரிவாயு தேவையில்லை என்றால் மாற்றி பயன்படுத்திக் கொள்ளலாம். இயற்கை எரிவாயு குழாயில் பயன்படுத்திய பிறகே அதற்கான தொகை வசூலிக்கப்படும். 15 நாட்கள் கட்டணம் கட்ட கால அவகாசம் வழங்கப்படும். மீண்டும் 30 நாள் அவகாசம் வழங்கிய பிறகே இயற்கை எரிவாயு நிறுத்தப்படும்.
மின் கட்டணம் போல் பயன்படுத்திய பிறகே கட்டணம் செலுத்தலாம். எல்.பி.ஜி., சிலிண்டரை போல் புக்கிங் செய்து காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. எப்போதும் போல் குழாய் வழியாக இயற்கை எரிவாயு வழங்கப்படும் என்றார்.

