ADDED : மார் 28, 2024 10:52 PM

கீழக்கரை : கீழக்கரை நகராட்சி கிழக்கு தெரு பள்ளிவாசல் செல்லும் சாலை, மேலத்தெரு தனியார் பள்ளிகள் செல்லும் சாலைகளில் தார் சாலையின் நடுவே புதிய சாலை அமைப்பதற்காக சாலையை கிளறும் பணி நடக்கிறது.
தற்போது லோக்சபா தேர்தலுக்காக கீழக்கரைக்கு அரசியல் கட்சி வேட்பாளர்கள் வரும் நிலையில் தார் சாலை மேடு பள்ளமாக கிளறப்பட்டுள்ளது. தார் கழிவுகள் சாலையோரங்களில் குவிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளது.
கீழக்கரையை சேர்ந்த உசேன் கூறியதாவது:
தற்போது பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நடக்கிறது. சாலை நடுவே இயந்திரத்தால் கீறப்பட்டுள்ளதால் அதில் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. பெரும்பாலானோர் தவறி விழுகின்றனர்.
தேர்தல் காலம், பள்ளி தேர்வு நேரத்தில் இது போன்று சாலை பராமரிப்பு என்ற பெயரில் நன்றாக உள்ள சாலையை சேதப்படுத்துவதுடன் புதிய சாலையை உடனே அமைக்காமல் வாரக் கணக்கில் போட்டு வைப்பதால் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
