/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சேஷ வாகனத்தில் வந்து சாப விமோசனம் அளித்த கள்ளழகர் விடிய விடிய அழகர் தசாவதாரம்
/
சேஷ வாகனத்தில் வந்து சாப விமோசனம் அளித்த கள்ளழகர் விடிய விடிய அழகர் தசாவதாரம்
சேஷ வாகனத்தில் வந்து சாப விமோசனம் அளித்த கள்ளழகர் விடிய விடிய அழகர் தசாவதாரம்
சேஷ வாகனத்தில் வந்து சாப விமோசனம் அளித்த கள்ளழகர் விடிய விடிய அழகர் தசாவதாரம்
ADDED : ஏப் 25, 2024 05:32 AM

பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் (அழகர்) கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் சேஷ வாகனத்தில் எழுந்தருளி மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்தார். தொடர்ந்து விடிய விடிய தசாவதார திருக்கோலத்தில் அருள் பாலித்தார்.
பரமக்குடி சவுராஷ்டிரா பிராமண மகாஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா நடக்கிறது. இங்கு ஏப்.18ல் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கி நேற்று முன்தினம்(ஏப்.23) அதிகாலை 3:30 மணிக்கு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
காலை 10:00 மணிக்கு மகிழம்பூ, செண்பகப்பூ, தாமரை, மல்லிகை, ஏலக்காய் மாலை என தனக்குரிய வாசனை மலர்களை சூடி குதிரை வாகனத்தில் அமர்ந்தார். அப்போது பல்வேறு மண்டகப் படிகளில் சேவை சாதித்து ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளி அதிகாலை 3:30 மணிக்கு காக்கா தோப்பு பெருமாள் கோயிலை அடைந்தார்.
பக்தர்கள் மஞ்சள் நீரை பீய்ச்சி அழகரை வரவேற்று மகிழ்ந்தனர். தொடர்ந்து இரண்டு நாட்களும் பரமக்குடி நகர் முழுவதும் பல நுாறு இடங்களில் அன்னதானம், நீர், மோர் பந்தல் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
நேற்று மாலை 5:00 மணிக்கு அழகர் சேஷ வாகனத்தில் பரமபத நாதனாக அமர்ந்து அருள் பாலித்தார். அப்போது கருப்பண சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி வைகை ஆற்றில் உள்ள மட்டா மண்டகப்படியில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்தார்.
இங்கு கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா கோஷம் வழங்க அழகரை தரிசித்தனர். தொடர்ந்து வாணியர் மண்டகப்படிக்கு இரவு 11:00 மணிக்கு அழகர் சென்றடைந்தார்.
அங்கு மச்சம், கூர்ம, ராமர், மோகினி என பல்வேறு அவதாரங்களில் விடிய விடிய அருள்பாலித்தார். ராமநாதபுரம் எஸ்பி., சந்தீஷ் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

