ADDED : பிப் 25, 2025 07:07 AM
திருவாடானை: திருவாடானை தாலுகாவில் கால்நடை கணக்கெடுப்பு பணிகள் மார்ச் மாதத்திற்குள் முடிக்கும் வகையில் களப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கால்நடைத்துறை டாக்டர்கள் தெரிவித்தனர்.கால்நடை டாக்டர்கள் கூறியதாவது:
கால்நடை கணக்கெடுப்பு ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுக்கப்படுவது வழக்கம்.
2019ல் கணக்கெடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 2024 அக்.,ல் கணக்கெடுப்பு பணி துவங்கியது.
திருவாடானை தாலுகாவில் திருவாடானை, தொண்டி, பெருவாக் கோட்டை, வெள்ளையபுரம், ஊரணிக் கோட்டை, திருவெற்றியூர், வட்டாணம் ஆகிய கிராமங்களில் கால்நடை மருத்துவமனைகள் உள்ளன.
அனைத்து வருவாய் கிராமங்கள் வாரியாக வீடு, வீடாகவும், இறைச்சி மற்றும் கோழி பண்ணைகளில் கால்நடைத்துறை அலுவலர்கள் நேரடியாக சென்று தகவல் சேகரித்து பிரத்யேக செயலியில் மொபைல் வாயிலாக பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
மார்ச்சுக்குள் கணக்கெடுப்பு முடியும். இக்கணக்கெடுப்பு முடிவின் படி மத்திய, மாநில அரசுகள் புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யும் என்றனர்.