/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஒப்பந்ததாரர் பதிவுக்கு லஞ்சம் அலுவலக மேலாளர் கைது
/
ஒப்பந்ததாரர் பதிவுக்கு லஞ்சம் அலுவலக மேலாளர் கைது
ADDED : ஆக 07, 2024 08:51 AM

கமுதி : ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஊராட்சி ஒன்றியத்தில் ஒப்பந்ததாரராக பதிவு செய்ய ரூ.12 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஒன்றிய அலுவலக மேலாளர் ராமச்சந்திரனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
கமுதி அருகே அ.நெடுங்குளத்தைச் சேர்ந்த செந்தில்குமார் 33, செங்கல் சூளை நடத்தி வருகிறார்.
இவரது தந்தை அங்குச்சாமி பெயரில் மூன்றாம் நிலை ஒப்பந்ததாரராக பதிவு செய்ய தாலுகா அலுவலகத்தில் கடந்தாண்டு மனு அளித்தார். பின் கடந்த ஜூலையில் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கட்டினார். இதுதொடர்பான சான்றிதழை அவர் கேட்ட போது ஒன்றிய அலுவலக மேலாளர் ராமச்சந்திரன், ''ரூ.20 ஆயிரம் தனக்கும் அலுவலக செலவிற்கும் கொடுத்து விட்டு சான்றிதழை வாங்கி கொள்ளலாம்,'' என்றார்.
பிறகு ராமச்சந்திரன் ரூ.12 ஆயிரம் கேட்டார்.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் செந்தில்குமார் புகார் அளித்தார்.
போலீசாரின் அறிவுரையின்படி ரசாயனம் தடவிய ரூ.12 ஆயிரத்தை செந்தில்குமார் கமுதி ஒன்றிய அலுவலகத்தில் ராமச்சந்திரனிடம் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த டி.எஸ்.பி., ராமச்சந்திரன் மற்றும் போலீசார் ராமச்சந்திரனை கைது செய்தனர்.