/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கடலாடி, சாயல்குடி பகுதிகளில் வரத்து கால்வாய்களை சீரமைக்க கோரிக்கை
/
கடலாடி, சாயல்குடி பகுதிகளில் வரத்து கால்வாய்களை சீரமைக்க கோரிக்கை
கடலாடி, சாயல்குடி பகுதிகளில் வரத்து கால்வாய்களை சீரமைக்க கோரிக்கை
கடலாடி, சாயல்குடி பகுதிகளில் வரத்து கால்வாய்களை சீரமைக்க கோரிக்கை
ADDED : ஜூன் 14, 2024 10:32 PM
கடலாடி : கடலாடி, சாயல்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 40க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய கண்மாய்கள் உள்ளன. நீர்வழி மேலாண்மை திட்டத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு கண்மாய் மற்றும் வரத்து கால்வாய்களை சீரமைத்து கண்மாய்களில் தண்ணீர் நிரப்பும் வகையில் வழிவகை செய்யப்பட்டிருந்தது.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கண்மாய் நீர் வழித்தடங்கள் பெரும்பாலானவை துார் வாரப்படாமலும், தனியார் ஆக்கிரமிப்பாலும் வெகுவாக சுருங்கி வருகிறது. கண்மாய்க்குள் தண்ணீர் இருக்க வேண்டிய இடங்களில் சீமைக் கருவேல மரங்கள் செழித்து வளர்ந்துள்ளன.
கடலாடி சுற்றுவட்டார ஒன்றிய பாசன கண்மாய்கள் மற்றும் பொதுப்பணித்துறையால் பராமரிக்கப்படும் பாசன கண்மாய்களின் வழித்தடம் முறையாக பராமரிப்பின்றி துார்ந்து போய் உள்ளது. சட்ட விரோதமாக மலட்டாற்று படுகையில் மண் அள்ளும் போக்கும் தொடர்கிறது.
இதே நிலை தொடர்ந்தால் நிலத்தடி நீர் அதல பாதாளத்திற்கு சென்று விடும். கடலாடி, சாயல்குடி பாசன விவசாயிகள் கூறியதாவது:
வானம் பார்த்த பூமியான இப்பகுதியில் மழை எவ்வளவு பெய்தாலும் அதனை கண்மாய்க்குள் சேகரிக்க வழியின்றி முறையான வரத்து கால்வாய்கள் மற்றும் தடுப்பணை, மதகணை பராமரிப்பின்றி உள்ளது. மதகணை திறப்பிற்கான ஷட்டர்கள் துருப்பிடித்தும் பொலிவிழந்தும் உள்ளன.
இவற்றை பராமரிக்க வேண்டிய பொதுப்பணித்துறையினர் பெயரளவில் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.
எனவே வரக்கூடிய பருவமழைக்கு முன் வரத்து கால்வாய்களை துார்வாரவும், ஆக்கிரமிப்பில் உள்ள வழித்தடங்களில் ஆக்கிரமிப்பு அகற்றவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.