/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
படகுகளில் பதிவு எண்களை தெளிவாக எழுதி வைக்க அறிவுரை
/
படகுகளில் பதிவு எண்களை தெளிவாக எழுதி வைக்க அறிவுரை
படகுகளில் பதிவு எண்களை தெளிவாக எழுதி வைக்க அறிவுரை
படகுகளில் பதிவு எண்களை தெளிவாக எழுதி வைக்க அறிவுரை
ADDED : நவ 11, 2025 11:27 PM
தொண்டி: படகுகளுக்கு வழங்கப்பட்ட பதிவு எண்ணை படகுகளில் தெளிவாக எழுதியிருக்க வேண்டும் என்று மீன்வளத்துறை அலுவலர்கள் மீனவர்களுக்கு அறிவுரை வழங்கினர்.
கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களின் படகுகளுக்கு படகை தனித்துவமாக அடையாளப்படுத்துவதற்காக பதிவு எண்கள் வழங்கப்பட்டுள்ளன.
பயன்படுத்திய படகை விற்பனை செய்யும் போது அதனை கண்காணிக்க இந்த எண் உதவுகிறது. இது தவிர சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் படகுகளை கண்காணிக்க பதிவு எண் முக்கியமாக தேவைப்படுகிறது. ஆனால் சில படகுகளில் பதிவு எண்கள் தெளிவாக எழுதாமல் உள்ளது.
இது குறித்து தொண்டி மீன்வளத்துறை மற்றும் மரைன் போலீசார் கூறியதாவது:
ராமநாதபுரம் (வடக்கு) ஆற்றங்கரை முதல் எஸ்.பி.பட்டினம் முதல் 2000த்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும், 77 விசைப்படகுகளும் உள்ளன.
சில படகுகளில் பதிவு எண் முறையாக எழுதவில்லை. வெடி வைத்து மீன்பிடிப்பது, தடையை மீறி விசைப்படகு மீனவர்கள் கடலோரங்களில் மீன்பிடிப்பது, லைட் வெளிச்சத்தில் மீன்பிடிப்பது போன்ற பல சட்டவிரோத செயல்களில் சில மீனவர்கள் ஈடுபடுகின்றனர்.
கடலுக்குள் சென்று சிறிது தொலைவில் இருந்து கண்காணிக்கும் போது பதிவு எண்கள் தெளிவாக எழுதாததால் அந்தப் படகுகள் மீது நடவடிக்கை எடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. சிறிய எழுத்தில் எழுதுவது, சில எண்கள் அழிந்திருப்பதுமாக உள்ளது.
ஆகவே நீண்ட தொலைவில் இருந்து பார்க்கும் போது எண்கள் தெளிவாக தெரியும் படி படகுகளில் பதிவு எண்கள் எழுதியிருக்க வேண்டும்.
முறையாக எழுதாத மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

