/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விலங்குகளால் பயிர் சேதம்: நிவாரணம் கேட்டு குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் குமுறல் வன அதிகாரியுடன் வாக்குவாதம்
/
விலங்குகளால் பயிர் சேதம்: நிவாரணம் கேட்டு குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் குமுறல் வன அதிகாரியுடன் வாக்குவாதம்
விலங்குகளால் பயிர் சேதம்: நிவாரணம் கேட்டு குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் குமுறல் வன அதிகாரியுடன் வாக்குவாதம்
விலங்குகளால் பயிர் சேதம்: நிவாரணம் கேட்டு குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் குமுறல் வன அதிகாரியுடன் வாக்குவாதம்
ADDED : நவ 23, 2024 06:36 AM

ராமநாதபுரம்,; ராமநாதபுரத்தில் நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் வன விலங்குகளால் சேதமடைந்த பயிருக்கு முழு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோஷமிட்டு வன அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் பழைய கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். வேளாண் இணை இயக்குநர்(பொ) பாஸ்கர மணியன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜீனு, வேளாண் துணை இயக்குநர் அமர்நாத் முன்னிலை வகித்தனர். அமைச்சர்கள் வருகை காரணமாக சிறிது நேரத்தில்கலெக்டர் புறப்பட்டு சென்று விட்டார்.
அதன் பின் நடந்த விவாதம்:
மயில்வாகனன், மாவட்ட செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்: கலெக்டர் இல்லாமல் கூட்டம் நடத்துவதில் பயனில்லை. 2018ல் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இதுவரை இழப்பீட்டு தொகை தரவில்லை. பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அடுத்த மாதத்திற்குள் வழங்கவில்லை என்றால் போராட்டம் நடத்துவோம்.
இணை இயக்குநர்: காப்பீட்டு நிறுவனத்திடம் பேசி வருகிறோம். தகுதியுள்ளவர்களுக்கு காப்பீட்டுத் தொகை வழங்கப்படும்
கவாஸ்கர், திருவாடானை: ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானையில் பயிர்கடன் வழங்க 15 நாட்கள் வரை கால தாமதம் செய்கின்றனர். பழைய அடங்கல் சான்றை வைத்து விரைவில் வழங்க வேண்டும்.
இணைப்பதிவாளர்: கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக உள்ள விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கப்படுகிறது. இதுவரை திருவாடானையில் ரூ.2 கோடி வரை வழங்கியுள்ளோம். 4 நாட்களில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பாஸ்கர பத்மநாபன், பரமக்குடி: விவசாய நிலத்தை மான்கள் சேதப்படுத்தி விட்டது. எனக்குரிய இழப்பீடு தரவில்லை. நான் அளித்த ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும். புகார் கொடுத்தால் வனத்துறையினர் மிரட்டுகின்றனர் என்றார்.
பரமக்குடி வனச்சரகர் கலையரசி: வன விலங்குகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து இழப்பீடு தரப்படுகிறது. முழு விளைச்சல் பாதிப்பிற்கு வழங்க இயலாது என்றார்.
இதையடுத்து, நீங்கள் பதில் சொல்லத் தேவையில்லை. 33 சதவீதம் பயிர் சேதம் ஏற்பட்டால் முழு நிவாரணம் தர வேண்டும்.இதற்கு மாவட்ட அதிகாரிகள் தான் பதில் சொல்ல வேண்டும். வனச்சரகர் சொல்லக்கூடாது என விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.
எங்களுக்கு சரியான பதில் தரவில்லை என்றால் கூட்டத்தை புறக்கணிப்பதாக விவசாயிகள் கோஷமிட்டனர். கலெக்டரிடம் பேசி முடிவு செய்யப்படும் என வேளாண் அதிகாரிகள்சமரசம் செய்ததால் கூட்டம் நடந்தது.
விவசாயிகள்: காட்டு பரமக்குடியில் கண்மாய்க்குள் சோலார் வைத்துள்ளனர். அவற்றை அகற்ற வேண்டும். கால்நடைகளுக்கு மழைக்கால நோய் தடுப்பூசி செலுத்த வேண்டும். உரக்கடைகளில் கூடுதல் விலைக்கு உரம் விற்கின்றனர். குறைதீர்க்கும் கூட்டத்தில் அளிக்கப்படும் மனுக்களுக்கு பதில் தருவது இல்லை.
கண்மாய், கால்வாய்கள் துார்வாரப்படாமல் உள்ளன. கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. இப்பிரச்னைகளுக்கு தீர்வு காணவில்லை என்றால் மருந்து குடித்து உயிரைவிட வேண்டிய நிலையில் உள்ளோம் என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
இணை இயக்குநர்(பொ) பாஸ்கரமணியன்: கூடுதல் விலைக்கு உரம் விற்கும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வேளாண் துறை சார்ந்த குறைகளுக்கு தீர்வு காணப்படும்.
ஊராட்சியில் முறைகேடு, குடிநீர் வரவில்லை, மின்சாரம், மருத்துவமனை பிரச்னை, நில மோசடி உள்ளிட்ட புகார்களை மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மனு அளித்து விவசாயிகள் பயன்பெறலாம் என்றார்.