/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஊருக்குள் வந்த மான்கள் நாய்கள் கடித்து பரிதாப பலி
/
ஊருக்குள் வந்த மான்கள் நாய்கள் கடித்து பரிதாப பலி
ADDED : அக் 23, 2025 12:48 AM

திருவாடானை: திருவாடானை அருகே தெரு நாய்கள் கடித்ததில், மூன்று மான்கள் இறந்தன.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகாவில் திருவாடானை, அஞ்சுகோட்டை, மங்களக்குடி, சிறுகம்பையூர், சிறுமலைக்கோட்டை, கட்டிவயல், நகரிகாத்தான், அடுத்தகுடி உள்ளிட்ட பெரும்பாலான கண்மாய்களில் மான்கள், மயில்கள் வாழ்கின்றன.
திருவாடானை மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இரு நாட்களாக மழை பெய்து வருவதால் கண்மாய்கள் நிரம்பி வருகின்றன. நேற்று அதிகாலை, அடுத்தகுடி கண்மாயில் மழைநீர் பெருகியதால் அங்கிருந்து, ஐந்துக்கும் மேற்பட்ட புள்ளி மான்கள் வெளியேறி குடியிருப்புக்குள் நுழைந்தன.
மான்களை பார்த்த நாய்கள் விரட்டி கடித்தன. இதில், மூன்று பெண் மான்கள் இறந்தன. இறந்த மான்களை, வனத்துறையினர் பெருவாக்கோட்டை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதனைக்கு பின், மான்களின் உடல்கள் புதைக்கப்பட்டன.