/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் தீபாவளி விற்பனை ஜோர்
/
ராமநாதபுரத்தில் தீபாவளி விற்பனை ஜோர்
ADDED : அக் 19, 2025 09:29 PM

ராமநாதபுரம்: தீபாவளி பண்டிகை இன்று (அக்.,20) கொண்டாடப்படுவதை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் தீபாவளி விற்பனை களைகட்டியது.
கடந்த இரு நாட்கள் விடுமுறை தினம் என்பதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து புத்தாடை பட்டாசு வாங்க மக்கள் ராமநாதபுரம் கடைவீதிக்கு வந்த வண்ணம் இருந்தனர்.
ராமநாதபுரம் நகரில் சாலைத் தெரு, வண்டிக்காரத் தெரு, பெரியபஜார், அரண்மனை உள்ளிட்ட கடை வீதிகளில் சாலையோர துணிக்கடைகள், சிறிய அளவிலான பட்டாசுக் கடைகள் போடப் பட்டிருந்தன.
ஜவுளிக்கடைகளில் ஒரே நேரத்தில் பலர் துணி எடுக்க வந்ததால் டோக்கன் முறையில் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். சிக்னல்களில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு கூட்டத்தை கட்டுப்படுத்தினர்.
சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக சாலையில் உள்ள குழிகளில் மழைநீர் தேங்கி காணப்பட்டதால் வாகனங்கள் செல்ல சிரமப் பட்டன.
சாலையோர கடைகளும் வழிநெடுக அதிகரித்து காணப்பட்டதால் மக்கள் நடப்பதற்கு கூட சிரமப்பட்டனர்.
ராமநாதபுரம் அரண்மனைக்கு செல்லும் பாதையில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் சாலைத் தெரு வழியாக அரண்மனை செல்லும் பஸ்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
அரண்மனைக்கு செல்லும் பஸ்கள் சாலைத் தெரு முகப்பிலேயே நிறுத்தப்பட்டது.
தெருக்களில் ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.