/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
போலி கருப்பட்டி ஆதிக்கம் பனை தொழிலாளர் பாதிப்பு
/
போலி கருப்பட்டி ஆதிக்கம் பனை தொழிலாளர் பாதிப்பு
ADDED : ஆக 23, 2025 10:46 PM
ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில், போலி கருப்பட்டி ஆதிக்கத்தால், பதனீரில் கருப்பட்டி தயாரிக்கும் பனை தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில், தற்போது கருப்பட்டி சீசன் துவங்கியுள்ளது. சாயல்குடி, மாரியூர், கன்னிராஜபுரம், மேலக்கிடாரம், பனைக்குளம் உட்பட, பல இடங்களில் பனங்கருப்பட்டி தயாரிக்கும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களிடம், மொத்த வியாபாரிகள் கிலோ, 200 ---- 250 ரூபாய் வரை தரத்திற்கு ஏற்ப வாங்கி, வெளி மார்க்கெட்டில், 280 -- 300 ரூபாய்க்கு விற்கின்றனர்.
சாயல்குடி அருகே கன்னிராஜபுரத்தை சேர்ந்த பனைத்தொழிலாளர்கள் நலவாரிய உறுப்பினர் ஆத்தி கூறுகையில், ''பனை மரத்தில் பதனீர் இறக்கி குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு கலந்து, பனங்கருப்பட்டி தயாரிக்கிறோம்.
''ஏப்., முதல் ஜூலை வரை சீசன். ஆனால், சர்க்கரை கலந்த கருப்பட்டி ஆதிக்கம் காரணமாக, மொத்த வியாபாரிகள் குறைந்த விலைக்கு கேட்கின்றனர். இதில், எதிர்பார்த்த விலையின்றி முதலீட்டை இழந்து, வாங்கிய கடனை அடைக்க சிரமப்படுகிறோம்.
''சீசன் இல்லாத போது, கிலோ, 300 ரூபாய்க்கு விலைபோகும். நல்ல வருமானம் கிடைக்கும். போலி கருப்பட்டி கிலோ, 150 -- 200 ரூபாய்க்கு விற்கின்றனர். கலப்பட கருப்பட்டியை ஒழிக்க, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

