/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மீன்பிடி படகில் சுற்றுலா பயணிகளை அழைத்துச் சென்றால் நடவடிக்கை மீன்வளத்துறை எச்சரிக்கை
/
மீன்பிடி படகில் சுற்றுலா பயணிகளை அழைத்துச் சென்றால் நடவடிக்கை மீன்வளத்துறை எச்சரிக்கை
மீன்பிடி படகில் சுற்றுலா பயணிகளை அழைத்துச் சென்றால் நடவடிக்கை மீன்வளத்துறை எச்சரிக்கை
மீன்பிடி படகில் சுற்றுலா பயணிகளை அழைத்துச் சென்றால் நடவடிக்கை மீன்வளத்துறை எச்சரிக்கை
ADDED : அக் 19, 2025 02:58 AM
திருவாடானை: தொண்டி அருகே காரங்காடு சுற்றுலா மையத்தில் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில் தீபாவளியை முன்னிட்டு வரும் சுற்றுலாப் பயணிகளை மீன்பிடி படகுகளில் அழைத்துச் சென்றால் மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறையினர் எச்சரித்துள்ளனர். தொண்டி அருகே காரங்காடு சுற்றுலா தலமாக 2017 ல் அறிவிக்கப்பட்டது. செப்.,6 ல் பணியாளர்களை மாற்றுவது சம்பந்தமாக கிராம மக்களுக்கும் வனத்துறையினருக்கும் பிரச்னை ஏற்பட்டது.
கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வனத்துறையினர் சமாதான முயற்சி செய்தும் பயனில்லை.
இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு தொடர் விடுமுறையாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டிருப்பதை பார்த்து மீன்பிடி படகில் செல்ல ஆர்வம் காட்டும் சுற்றுலாப் பயணிகளை மீன்பிடி படகுகளில் ஏற்றிச் செல்லக்கூடாது என எச்சரிக்கை விடப் பட்டுள்ளது.
இது குறித்து தொண்டி மீன்வளத்துறை ஆய்வாளர் அபுதாகிர் மற்றும் மரைன் போலீசார் கூறியதாவது:
ராமநாதபுரம் (வடக்கு) ஆற்றங்கரை முதல் எஸ்.பி.பட்டினம் வரை 2000த்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் உள்ளன. கடலில் பயணிகளை ஏற்றிச் செல்ல தடை இருந்தும் காசுக்கு ஆசைப்படும் மீனவர்கள் கண்டு கொள்ளாமல் ஆங்காங்கே சில இடங்களில் ஏற்றிச் செல்கின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு தேவிபட்டினத்தில் சுற்றுலா பயணிகள் சென்ற படகு கவிழ்ந்து மூன்று பேர் இறந்தனர்.
மேலும் 10 முதல் 15 பேர் பயணிக்கும் படகுகளில் 25 முதல் 30 பேரை ஏற்றிச் செல்கின்றனர். ஆர்வத்தில் பயணிகள் எழ முயற்சிக்கும் போது படகு ஆட்டம் கண்டு கவிழ்கிறது.
எனவே காரங்காடு உள்ளிட்ட அனைத்து கடலோர பகுதிகளிலும் மீன்பிடி படகுகளில் சுற்றுலாப் பயணிகளை மீனவர்கள் அழைத்து சென்றால் படகை பறிமுதல் செய்வதோடு உரிமம் ரத்து செய்யப்படும். அரசின் நலத்திட்ட உதவிகள் நிறுத்தப்படும் என்றனர்.