/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மண்டபத்தில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது
/
மண்டபத்தில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது
ADDED : அக் 22, 2025 07:51 PM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம், மண்டபம் பகுதியில் பெய்த கன மழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன், தங்கச்சிமடம் பகுதியில் தொடர்ந்து பெய்தது. இதில் ராமேஸ்வரம் 100, மண்டபம் 140, பாம்பன் 110 , தங்கச்சிமடம் 170 மி.மீ., பதிவானது. இதனால் மண்டபம் கலைஞர் நகர் 2வது தெருவில் உள்ள 60க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை வெள்ளம் சூழ்ந்து வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மக்கள் வெளியேற முடியாமல் முடங்கினர்.
மேலும் பாம்பன் சின்னபாலம், தரவைத்தோப்பு, தங்கச்சிமடம் விக்டோரியா நகர், ராமேஸ்வரத்தில் முனியசாமி கோயில் தெரு, நகராட்சி அலுவலகம் முன், காஸ் கோடவுன் அலுவலகம் அருகில் மழை நீர் குளம் போல் தேங்கியது. ராமேஸ்வரம் கோயில் நான்கு ரதவீதி, லட்சுமண தீர்த்தம் சுற்றிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
தொடர் மழையால் தீபாவளியான நேற்றுமுன்தினம் பலரும் பட்டாசு வெடிக்க, பொருட்கள் வாங்க முடியாமல் வீடுகளில் முடங்கி தவித்தனர்.