ADDED : பிப் 14, 2026 05:32 AM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் கொத்தமல்லி சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் பாசன பகுதிகளை தவிர்த்து, சுற்றுப்புற பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. அறுவடை செய்யப்பட்ட வயல்களில் வைக்கோல்களை அகற்றிய பின் விவசாயிகள், கோடை சாகுபடியாக எள், பருத்தி, சிறுதானியங்கள், கொத்தமல்லி உள்ளிட்ட பல்வேறு தானியங்கள் விதைப்பு செய்வதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
கொத்த மல்லி அக்., நவ., மாதங்களில் மிளகாய் பயிர்களில் ஊடுபயிராக சாகுபடி செய்யப்படுகிறது. கோடை காலத்தில் பிப்., மார்ச் காலக் கட்டத்தில் விதைப்பு செய்யப்படுகிறது. மூன்று முதல் நான்கு வாரங்களில் கொத்தமல்லி இலைகளை தேவைக்கு ஏற்ப அறுவடை செய்யலாம். இரண்டு மாதங்களில் முழுமையான சாகுபடியை பெறலாம்.
லேசான ஈரப்பதத்திலும், வறட்சியிலும் அதிக மகசூல் கொடுக்கக் கூடியது என்பதால், ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்தில் எள் மற்றும் கொத்தமல்லி விதைப்பு செய்வதில் விவசாயிகள் தற்போது ஆர்வம் காட்டுகின்றனர்.

