'தொண்டு நிறுவன நலத்திட்டங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வாருங்கள்'
'தொண்டு நிறுவன நலத்திட்டங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வாருங்கள்'
ADDED : ஆக 23, 2026 11:24 PM
திருப்புல்லாணி: தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஓ.என்.ஜி.சி., நிறுவனத்தின் சமூக மேம்பாட்டு திட்டத்தில் திருப்புல்லாணி, ரெகுநாதபுரம் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் ஏராளமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
குடிநீர் பிரச்னையை தீர்ப்பதற்காக திறந்தவெளி கிணறு அமைத்தல்,ஆழ்துளை கிணறு மற்றும் உயர் கோபுர மின் விளக்குகள், உவர் நீரை நன்னீராக மாற்றக்கூடிய ஆர்.ஓ., பிளான்ட் உள்ளிட்டவைகள் இப்பகுதியில் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த 2021க்கு பிறகு வழங்கப்பட்ட இத்திட்டம் முடிவுற்றவுடன் அவற்றை முறையாக பராமரிக்காமல் விட்டுச் செல்வதால் இத்திட்டத்தின் நோக்கம் கேள்விக்குறியாகி உள்ளது.
இதனால் தொண்டு நிறுவனங்களுக்கு அரசின் மூலம் வழங்கப்பட்ட நிதி பெருமளவு வீணடிப்பு செய்யப்படுகிறது. தன்னார்வலர்கள் கூறியதாவது:
தொண்டு நிறுவனங்கள் மூலம் குடிநீர் தேவையை கணக்கிட்டு பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு குடிநீர் வழங்கும் திட்டம் பல இடங்களில் காட்சிப் பொருளாக உள்ளது.
அதே போன்று கிணறு தோண்டப்பட்ட இடங்களிலும் அவை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இல்லாமல் உள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட இடங்களில் பயன்பாடின்றி உள்ள இடங்களை ஆய்வு செய்து அவற்றை மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் இத்திட்டத்தின் நோக்கம் முறையாக மக்களை சென்றடையும்.
பராமரிப்பு செய்யாமல் திறப்பு விழா மட்டுமே நடத்துவதால் இத்திட்டத்தின் நோக்கம் கேள்விக்குறியாக மாறி வருகிறது என்றனர்.
