ADDED : ஏப் 08, 2024 11:58 PM

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட வைகைப் பாசன விவசாயிகள் சங்கம் பொதுச்செயலாளர் எம்.மதுரை வீரன் கூறியதாவது:
டெல்டா மாவட்டங்களுக்கு அடுத்தப்படியாக ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 3 லட்சத்து 40ஆயிரம் ஏக்கரில் ஆண்டுதோறும் ஒரு போகத்தில் நெல் விளைகிறது. ஆனால் இங்கு நெல்கொள்முதல் நிலையங்கள் இல்லை. பெரிய அளவில் கோடவுன் வசதி இல்லை.
ராமநாதபுரம், ஆர்.எஸ்.மங்கலத்தில் 2 முதல் 4 டி.எம்.சி., நீரை தேக்கும் அளவிற்கு பெரிய கண்மாய்கள் உள்ளன. இவற்றின் கால்வாய்கள், நீர்பிடிப்பு பகுதிகள் துார் வாரப்படாமல் ஆண்டுதோறும் பல லட்சம் லிட்டர் வைகை ஆற்றுநீர் வீணாக கடலில் கலக்கிறது.
குண்டுமிளகாய்க்கு புவிசார் குறியீடு கொடுத்தனர். அதற்குரிய குறைந்த பட்ச ஆதார விலை கிடைக்காமல் விவசாயிகள் போராடுகின்றனர். இது தொடர்பாக அமைச்சர், எம்.எல்.ஏ., கலெக்டர் என பலரிடம் பல ஆண்டுகளாக விவசாய சங்கங்கள் சார்பில் கோரிக்கை வைத்து வருகிறோம்.
கடந்த பட்ஜெட் கருத்துகேட்பு கூட்டம் மற்றும் தேர்தல் அறிக்கை தயாரிப்பு கூட்டங்கள், மதுரைக்கு முதல்வர் ஸ்டாலின் வந்த போதும் கோரிக்கைகளை முன் வைத்தோம்.
குறிப்பாக ராமநாதபுரம், ஆர்.எஸ்.மங்கலம், பரமக்குடி பகுதியில் தலா 10 ஆயிரம் டன் நெல் சேமிப்பு கோடவுன்கள், சிவகங்கை அல்லது ராமநாதபுரத்தில் வேளாண் கல்லுாரி துவங்க வேண்டும்.
பெரிய கண்மாய் கால்வாய்களை துார்வாரி ஆழப்படுத்த வேண்டும். சிவகங்கையில் உள்ளது போல நறுமணப் பூங்கா அமைக்க வேண்டும். 50 ஆயிரம் ஏக்கரில் பருத்தி விளைகிறது. அதற்குரிய ஸ்பின்னிங் மில் அமைக்க வேண்டும். அரசு சார்பில் நவீன அரிசி ஆலைகள் அமைத்து பொதுவினியோக திட்டத்தில் பள்ளி சத்துணவுக்கும், ரேஷன் கடைகளில் விற்கவும் வேண்டும். கருப்பட்டியை ரேஷனில் விற்க வேண்டும். காவிரி - வைகை- குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்துள்ளோம்.
ஆனால் இவற்றில் எதையும் செய்து தரவில்லை. தேர்தல் அறிக்கையில் கூட இடம்பெறவில்லை. விவசாயிகளிடம் கருத்து கேட்கின்றனர். அதன் பிறகு யாரும் கண்டு கொள்வதே இல்லை என்றார்.

