ADDED : மார் 02, 2024 04:17 AM
ராமநாதபுரம், : -தமிழகத்தில் காவிரி- - வைகை- - குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டத்திற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்யாதது ஏமாற்றத்தை அளிப்பதாக ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
காவிரி ஆற்றில் வெள்ளம் ஏற்படும் போது உபரி நீரை வெள்ளக் கால்வாய் மூலம் மாயனுார் கதவணையில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் வழியாக சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்கள் பயன் பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இத்திட்டம் ரூ.6941 கோடியில் 2021ல் அப்போதைய முதல்வர் பழனிசாமியால் 700 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது. திட்டம் மூன்று கட்டங்களாக பிரிக்கப்பட்டு பணிகள் துவங்கியது.
முதல் கட்டமாக திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் 118.45 கி.மீ.,க்கு கட்டளை கால்வாயிலிருந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் தெற்கு வெள்ளாறு பகுதியில் இணைக்கப்படும். இதன் மூலம் 342 கண்மாய்களும், 42 ஆயிரத்து 170 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறும்.
இரண்டாம் கட்டத்தில் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள தெற்கு வெள்ளாற்றில் இருந்து 109 கி.மீ.,க்கு கால்வாய்கள் அமைக்கப்பட்டு வைகை ஆற்றுடன் இணைக்கப்படும். இதன் மூலம் 220 கண்மாய்களும், 23 ஆயிரத்து 245 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும்.
மூன்றாவது கட்டமாக 34 கி.மீ.,க்கு கால்வாய்கள் வெட்டி வைகை ஆறு முதல் ராமநாதபுரம் மாவட்டத்தில் குண்டாறு வரை இணைக்கப்படும். இதில் விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் 492 கண்மாய்களும் 44 ஆயிரத்து 547 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறும்.
தற்போது இத்திட்டத்தை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் நிலம் எடுப்பு பணிக்கு 554.17 கோடி ரூபாயும், கால்வாய் அமைக்கும் பணிகளுக்கு 111.52 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதில் ரூ.91.18 கோடியில் கால்வாய் வெட்டும் பணிக்கு செலவிடப்பட்டது. இதில் 64 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக தெரிவித்தார். இத்திட்டத்தில் கால்வாய்கள் அமைக்கும் பணிகள் ஆமை வேகத்தில் நடக்கிறது.
தற்போது வெளியிடப்பட்ட வேளாண் பட்ஜெட்டில் இத்திட்டத்திற்கு நிதி எதுவும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இந்த வெள்ள நீர் கால்வாயால் உபரியாக கிடைக்கும் நீர் கடலில் சென்று வீணாக கலக்காமல் காவிரியிலிருந்து தெற்கு வெள்ளாறு, வைகை, குண்டாறு ஆகிய ஆறுகளுடன் இணைக்கும் திட்டமாகும்.
இத்திட்டத்தால் திருச்சி, கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்கள் பயன் பெறும் நிலையில் விரைவாக செயல்படுத்தாமல் இருப்பது விவசாயிகள் மத்தியில் வேதனை ஏற்படுத்தியுள்ளது.

