/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் மாவட்ட காவிரி குடிநீர் திட்டத்தில்.. பெயரளவில் விநியோகம்
/
ராமநாதபுரம் மாவட்ட காவிரி குடிநீர் திட்டத்தில்.. பெயரளவில் விநியோகம்
ராமநாதபுரம் மாவட்ட காவிரி குடிநீர் திட்டத்தில்.. பெயரளவில் விநியோகம்
ராமநாதபுரம் மாவட்ட காவிரி குடிநீர் திட்டத்தில்.. பெயரளவில் விநியோகம்
ADDED : பிப் 05, 2025 05:02 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் காவிரி குடிநீர் குழாய் உடைப்புகளால் வீணாகி நகர் கிராமங்களுக்கு முழுமையாக குடிநீர் விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. பெயரளவில் வருவதால் தனியார் டேங்கர் லாரிகளில் குடம் ரூ.12க்கு விலைக்கு வாங்கி மக்கள் அவதிப்படுகின்றனர்.
ராமநாதபுரம் காவிரி கூட்டுகுடிநீர் திட்டத்தில் 2009ம் ஆண்டில் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு ரூ. 616 கோடியில் காவிரி கூட்டுகுடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இத்திட்டத்தில் பரமக்குடி, ராமநாதபுரம், கீழக்கரை ஆகிய நகராட்சிகள், 7 பேரூராட்சிகள், 2306 கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
ஆனால் காவிரி குழாய்கள் பராமரிப்பின்றி உடைந்து குடிநீர் வீணாவது வாடிக்கையாகியுள்ளது. இதனால் நகர், கிராமங்களுக்கு முழுமையாக குடிநீர் வழங்க முடியாத நிலை உள்ளது. குறிப்பாக மாவட்ட தலைநகரமான ராமநாதபுரம் பெயரளவில் மட்டுமே சிறப்பு நிலை நகராட்சியாக உள்ளது.
அடிப்படை வசதியாக குடிநீர், பாதாள சாக்கடை பிரச்னை பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். ராமநாதபுரம் நகராட்சி 33 வார்டுகளுக்கு தினமும் 50 லட்சம் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் 25 லட்சம் லிட்டர் வழங்கப்படுகிறது.
மேலும் தற்போது குழாய்கள் மாற்றும் பணியால் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு நகர், பேராவூர், சக்கரகோட்டை, சூரன்கோட்டை கிராமங்களில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுகிறது. இதனால் 2, 3 நாட்களுக்கு ஒருமுறை பெயரளவில் குடிநீர் வருவதால் மக்கள் தனியார் லாரிகளில் குடம் ரூ.13க்கு விலை கொடுத்து வாங்குகின்றனர்.
ராமநாதபுரம் நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் குழாய்கள் சேதம் காரணமாக விநியோகத்தில் சிக்கல் ஏற்படுகிறது. இது தொடர்பாக குடிநீர் வடிகால்வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம். ராமநாதபுரத்தில் தொய்வு இல்லாமல் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றனர்.