/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பசும்பொன் தேவர் குருபூஜை ஆன்மிக விழாவுடன் துவக்கம்
/
பசும்பொன் தேவர் குருபூஜை ஆன்மிக விழாவுடன் துவக்கம்
பசும்பொன் தேவர் குருபூஜை ஆன்மிக விழாவுடன் துவக்கம்
பசும்பொன் தேவர் குருபூஜை ஆன்மிக விழாவுடன் துவக்கம்
ADDED : அக் 29, 2025 02:36 AM
கமுதி:  கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் 118வது ஜெயந்தி விழா 63வது குருபூஜை விழா நடக்கிறது. இதனை முன்னிட்டு நேற்று காலை 6:00 மணிக்கு ஆன்மிக விழாவுடன் துவங்கியது. நினைவாலய பொறுப்பாளர் காந்திமீனாள் தலைமை வகித்தார். பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் குழுவினர் முன்னிலையில்  யாகசால பூஜையுடன் துவங்கியது. கணபதி ஹோமம், பூர்ணாஹுதி, லட்சார்ச்சனை, சிறப்பு யாகசால பூஜை நடந்தது.
வேத மந்திரங்கள் முழங்க கடம்புறப்பாட்டுக்கு பிறகு கும்பநீர் எடுத்துச் செல்லப்பட்டு முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. பின்பு பால், சந்தனம், மஞ்சள் உட்பட 21 வகை அபிஷேகம், பூஜை நடந்தது. ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியும், பால்குடம், பொங்கல் வைத்தும், நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
மாலை வளாகத்தில் விளக்கு பூஜை நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் முக்கிய வீதிகளில் தேவர் சிலை ஊர்வலமாக கொண்டு வந்தனர். அடிப்படை வசதிகள் குறித்து ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் கமுதி ஒன்றிய அலுவலக பணியாளர்கள் செய்து வருகின்றனர். தென் மண்டல டி.ஜி.பி., (பொறுப்பு) வெங்கட்ராமன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கூடுதல் பஸ்
இயக்க கோரிக்கை
முதுகுளத்துார்: தேவர் குருபூஜை விழாவையொட்டி கடந்த ஆண்டு கமுதி, முதுகுளத்துார், கடலாடி பகுதியில் ஒருசில அரசு பஸ் மற்றும் தனியார் பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டதால் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் மாணவர்கள், அரசு அதிகாரிகளும் பணிக்கு செல்ல முடியாமல் தவித்தனர். வாடகை வாகனங்களில் செல்லும் நிலை ஏற்பட்டது. எனவே இந்த ஆண்டு கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
பால்குடம் ஊர்வலம்
 முதுகுளத்துார் ஆப்பநாடு மறவர் சங்கம் சார்பில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு பால்குடம் ஊர்வலம் நடந்தது. பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள தேவர் சிலை முன்பு கணபதி ஹோமம், யாகசால பூஜைகள் நடந்தது. சுப்பிரமணியசுவாமி கோயிலில் இருந்து பொதுமக்கள்  1008 பால்குடம் எடுத்து காந்தி சிலை, தேரிருவேலி முக்கு ரோடு வழியாக ஊர்வலமாக வந்தனர்.   தேவர் சிலைக்கு பால், சந்தனம் உட்பட 16 வகை அபிஷேகம், பூஜை நடந்தது. முதுகுளத்துார், கடலாடி, சாயல்குடி சுற்றியுள்ள கிராம மக்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.

