ADDED : ஆக 19, 2026 04:22 PM
தேவிபட்டினம்:
தேவிபட்டினம் சுற்றுவட்டாரத்தில் மழையால், உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தேவிபட்டினம், கோப்பேரி மடம், திருப்பாலைக்குடி, சம்பை, நதிப்பாலம், வாலிநோக்கம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் உப்பள பாத்திகள் மூலம் உப்பு உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் முதல் தர உப்பு உணவு பொருட்கள் பயன்பாட்டிற்கும், இரண்டாம் தர உப்பு கருவாடு உலர்த்துதல், தோல் பதனிடுதல் உள்ளிட்ட பயன்பாட்டிற்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடலோர பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருவதன் காரணமாக, தேவிபட்டினம், நதிப்பாலம், திருப்பாலைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உப்பள பாத்திகளில் மழை நீர் தேங்கி வருகிறது. உப்பு உற்பத்தி செய்வதில் காலதாமதம் ஏற்பட்டு, தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். கடும் வெயில் சுட்டெரிக்கும் வாரங்களில், ஒரு சில தினங்களிலேயே பாத்திகளில் தேக்கப்படும் தண்ணீர் உப்புகளாக உற்பத்தி ஆகின்றன. சீதோசன நிலை மாற்றம் மற்றும் மழை காரணமாக வெயில் குறையும் பட்சத்தில், உப்பு உற்பத்திக்கு கூடுதல் நாட்கள் தேவைப்படும் சூழல் உள்ளது.
