/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம்-ராஜபாளையம் சென்ற அரசு பஸ் நிறுத்தம்
/
ராமேஸ்வரம்-ராஜபாளையம் சென்ற அரசு பஸ் நிறுத்தம்
ADDED : ஜன 03, 2024 05:54 AM
ராமநாதபுரம்: -ராமேஸ்வரத்தில் இருந்து ராஜபாளையம் வரை இயக்கப்பட்ட அரசு பஸ்சை பரமக்குடியுடன் நிறுத்தியதால் பயணிகள் அவதிப்படும் நிலையில் ராமேஸ்வரம் வரை மீண்டும் இயக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
ராமேஸ்வரம் அரசுப் போக்குவரத்து கிளையில் இருந்து தினமும் காலை 7:00 மணிக்கு ராஜபாளையத்திற்கு பஸ் இயக்கப்பட்டது. இந்த பஸ் ராமநாதபுரத்தில் காலை 8:20 மணிக்கு வந்தடையும். அங்கிருந்து ராஜபாளையம் செல்லும்.
மீண்டும் ராஜபாளையத்தில் இருந்து இரவு 8:30 மணிக்கு ராமநாதபுரம் வந்து அங்கிருந்து 9:30 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும். இந்த பஸ் ராமநாதபுரம், பரமக்குடி, பார்த்திபனுார், கமுதி, அருப்புக்கோட்டை, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்துார் வழியாக ராஜபாளையம் வரை இயக்கப்பட்டது.
இந்த பஸ்சில் விவசாயிகள் ராஜபாளையம் மார்க்கெட் செல்வதற்கும், வியாபாரிகள், கல்லுாரிகளில் பயிலும் மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு இந்த பஸ் பயன்பட்டு வந்தது. சமீபத்தில் ராமேஸ்வரம் கிளையில் இருந்து இயக்கப்பட்ட இந்த பஸ் கமுதி கிளைக்கு வழங்கப்பட்டது.
இதனால் இங்கிருந்து இயக்கப்படும் ராஜபாளையம் பஸ் இரவு நேரங்களில் பரமக்குடியுடன் நிறுத்தப்படுகிறது. தொலை துாரத்தில் ராஜபாளையத்தில் இருந்து ராமேஸ்வரம் வரை வரும் பக்தர்கள், பரமக்குடியில் இறங்கி வேறு பஸ் மாறும் நிலை உள்ளது.
எனவே இந்த பஸ்சை ராமேஸ்வரம்வரை இயக்க வேண்டும், என பயணிகள் எதிர்பார்க்கின்றனர். போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.