ADDED : நவ 12, 2024 04:48 AM
பெருநாழி: பெருநாழி அருகே டி.வி.எஸ்.புரம் கிராமத்தில் இருந்து அருப்புக்கோட்டை ரோட்டில் பயணியர் நிழற்குடை இல்லாததால் பொதுமக்கள் சிரமத்தை சந்திக்கின்றனர்.
அருப்புக்கோட்டை ரோட்டின் பிரதான பகுதியில் டி.வி.எஸ்.புரம் பஸ் ஸ்டாப் உள்ளது. இங்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரோடு விரிவாக்கத்திற்காக 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை கட்டடம் முழுவதுமாக அகற்றப்பட்டது.
அருப்புக்கோட்டை செல்லும் பிரதான ரோட்டின் வழியாக வரக்கூடிய பஸ்கள் நிறுத்தத்தில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த கமுதி மற்றும் புதுார் வழித்தடங்களில் செல்லக்கூடிய மக்கள் சாலையை பயன்படுத்துகின்றனர். இதனால் வெயிலிலும், மழையிலும் நான்கு ரோடு சந்திக்கும் இடத்தில் பஸ்சிற்காக காத்திருக்கின்றனர்.
குழந்தைகளும், பெண்களும், முதியவர்களும் சிரமத்தை சந்திக்கின்றனர். எனவே டி.வி.எஸ்.புரத்திற்கு தரமான பயணியர் நிழற்குடை கட்டடம் அமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
