/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சாயல்குடியில் கமகமக்கும் கருவாடுகள்
/
சாயல்குடியில் கமகமக்கும் கருவாடுகள்
ADDED : அக் 01, 2025 08:05 AM
ரா மநாதபுரம் சாயல்குடி பேரூராட்சி வி.வி.ஆர்., நகர் செல்லும் வழியில் ஏராளமான கருவாட்டு கம்பெனிகள் உள்ளன. இங்கு தயாராகும் கம கமக்கும் கருவாடுகள் வெளியூர் சந்தைகளுக்கு செல்கிறது. நரிப்பையூர், மூக்கையூர், மாரியூர், வாலிநோக்கம், முந்தல், துாத்துக்குடி, பாம்பன், ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் பிடிபடும் மீன்களை மொத்தமாக சரக்கு வாகனங்களில் கொண்டு வந்து இங்குள்ள கருவாட்டிற்காக உலர வைக்கும் கம்பெனிகளில் விற்கின்றனர்.
இது போன்ற கருவாட்டு கம்பெனிகள் 10க்கும் அதிகமாக சாயல்குடி பகுதிகளில் உள்ளன. கருவாடுகளுக்கு உகந்த மீன்களாக சீலா, நெத்திலி, ஊழி, நகரை, பண்ணா, சூடை, சாளை, கனவா, திருக்கை, வாளை, சூரை, காரா, முட்டை பாறை உள்ளிட்ட மீன்கள் பயன்படுத்தப்படுகின்றன. கருவாடுகளுக்காக பெரிய சிமென்ட் தொட்டிகளில் நீர் நிரப்பப்பட்டு அவற்றில் உப்பை கொட்டி மீன்களை நிரப்பி இரண்டு முதல் மூன்று மணி நேரத்துக்கு விடாமல் ஊற வைத்து விடுகின்றனர். பின்னர் அவற்றை தென்னை நார் விரிப்புகளில் ரகம் வாரியாக பிரித்து உலர வைக்கின்றனர்.
இரண்டு நாள் உலர வைத்த பின் கருவாடுகளாக சாயல்குடி, கடலாடி, முதுகுளத்துார், கமுதி, பரமக்குடி, ராமநாதபுரம், ரெகுநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடக்கும் வாரச்சந்தைகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. கருவாட்டு வியாபாரிகள் கூறியதாவது:
கருவாட்டிற்கென பிரத்தியேகமாக பிடிபடும் மீன்களை உரிய முறையில் உலர வைத்து அவற்றை வெளியூர் சந்தைக்கு விற்பனைக்காக அனுப்பி வருகிறோம். கருவாட்டு வியாபாரிகள் மொத்தமாகவும், சில்லரையாகவும் இங்குள்ள கருவாட்டு கம்பெனிகளில் வந்து வாங்கி செல்கின்றனர். சாயல்குடி கருவாடுகள் சுவை மிகுந்ததாக இருப்பதால் அவற்றிற்கு எப்போதும் சந்தையில் கிராக்கி நிலவுகிறது என்றனர்.