ADDED : ஜூலை 26, 2025 03:31 AM

தேவிபட்டினம்: தேவிப்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற நவபாஷாண நவக்கிரகம் அமைந்துள்ளது. இங்கு ஆடி, தை அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும், பல்வேறு தோஷ நிவர்த்தி வேண்டி பரிகார பூஜைகள் செய்யவும், தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். முக்கியத்துவம் வாய்ந்த நவபாஷாணம் அமைந்துள்ள கடல் பகுதியில் நேற்று அதிகாலை முதல் கடல் நீர் உள்வாங்கியது.
இதனால் நவக்கிரகங்கள் அனைத்தும் கடல் நீரின்றி முழுமையாக வெளியில் தெரிந்தன. இந்த நிலையில், நடைமேடை வழியாக சுற்றி வந்து பக்தர்கள் நவக்கிரகங்களை வழிபாடு செய்தனர். வழக்கமாக கடல் நீர் உள் வாங்குவதும், மாலையில் மீண்டும் வழக்கமான நிலைக்கு வருவதும் இயல்பானது என்றாலும் நேற்று வழக்கத்திற்கு மாறாக கூடுதல் தொலைவு உள்வாங்கியதால், மீனவர்களும், பக்தர்களும் அச்சமடைந்தனர்.
உள்வாங்கிய கடல் நீர் மதியம் 2:30 மணிக்கு மேல் இயல்பு நிலைக்கு திரும்பியது.