/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கருத்தடை செய்த பெண் பலி சமரசமாகி உடலை பெற்றனர்
/
கருத்தடை செய்த பெண் பலி சமரசமாகி உடலை பெற்றனர்
ADDED : பிப் 18, 2024 12:52 AM
ராமநாதபுரம்: கருத்தடை செய்த பெண் பலியான சம்பவத்தில் அதிகாரிகள் சமரசத்தை தொடர்ந்து உறவினர்கள் உடலை பெற்றனர்.
ராமநாதபுரம் அருகே மருதுார் பகுதியை சேர்ந்த சதீஸ் மனைவி கீதா 24. இவருக்கு பெண், ஆண் குழந்தைகள் உள்ளன.
ஆண் குழந்தை பிறந்த இரண்டரை மாதத்தில் கருத்தடை செய்வதற்காக நயினார்கோவில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
கருத்தடை செய்ததில் கீதாவுக்கு ரத்தப்போக்கு அதிகமாகி உயிரிழந்தார். ஆத்திரமடைந்த உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
போலீசாருக்கும் மறியல் செய்தவர்களுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி உடலை வாங்க மறுத்தனர்.
இந்நிலையில் கலெக்டர் விஷ்ணுசந்திரன், ராமநாதபுரம் கோட்டாட்சியர் கோபு முன்னிலையில் சமரசம் பேசினர்.
கீதா உடலை அடக்கம் செய்ய ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டது. தமிழக, மத்திய அரசுகளின் இழப்பீடு பெற்று தரப்படும். அவரது வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்.
பிரேத பரிசோதனை அறிக்கை வந்தவுடன் டாக்டர்கள் குழு விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட டாக்டர்கள் தவறு செய்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும், என உறுதியளித்ததன் பேரில் கீதாவின் உடலை நேற்று காலை 9:30 மணிக்கு பெற்றனர்.------