ADDED : பிப் 16, 2024 05:08 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு கிராம உதவியாளர்கள் மாநில சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதபோராட்டம் நடந்தது.
மாநிலப்பொருளாளர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநில தலைவர் முத்தையா, செயலாளர் சுதாகர், மாவட்டத் தலைவர் வெள்ளத்துரை, செயலாளர் சாமிநாதன் முன்னிலை வகித்தனர்.
இதில் 2017-18 ல் பதவி உயர்வு வழங்காததை கண்டித்தும், நடப்பு 2023-24ல் 10ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் கிராம உதவியாளர்கள் அனைவருக்கும் வி.ஏ.ஓ., பதவி உயர்வு வழங்காமல் இரு பணியிடங்களுக்கு ஒன்று வழங்கியதை கண்டித்தும்காலை 10:00 முதல் மாலை 5:45 மணி வரை உண்ணாவிரத போராட்டம் நடந்தது. ஏராளமான கிராம உதவியாளர்கள் பங்கேற்றனர்.
*திருவாடானை தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் மூர்த்தி தலைமை வகித்தார். செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் தென்னவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.